உலகெங்கிலும் பார்ப்பதற்கு ஆச்சரியமூட்டும் பல விசித்திரமான கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்களின் நடுவே ரயில் செல்லும், சில கட்டிடங்கள் சாலையின் நடுவே நிற்கும். ஆனால், 12 மாடி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நேர் மேலே ஒரு பிரம்மாண்ட நெடுஞ்சாலை கட்டப்பட்டிருப்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதன் மீது வாகனங்கள் கடந்து செல்லும்போது, கீழே இருக்கும் வீடுகளின் சுவர்கள் அதிரத் தொடங்கும். அப்படியிருந்தும், அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்ய மறுக்கிறார்களாம்.
எப்பா! இவ்வளவு கரண்ட்டா? உலகையே ஒளிர வைக்கும் டாப் மின் உற்பத்தி நிலையங்கள் இதுதான்
இந்த விசித்திரச் சாலை எங்கே இருக்கிறது?
இந்த விசித்திரமான உள்கட்டமைப்பு சீனாவின் குய்யாங் (Guiyang) நகரில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை எந்தவொரு வெற்று நிலத்திலோ அல்லது மலைகளிலோ செல்லாமல், பத்துக்கும் மேற்பட்ட உயரமான குடியிருப்பு கட்டிடங்களுக்கு நேர் மேலே செல்கிறது.
இந்தப் பாலத்தின் பெயர் ‘ஷுய்கோஷி பாலம்’ (Shuikoushi Bridge). இது இன்றைய சீனத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகும். உலக மக்கள் தங்கள் வீடுகளுக்கு மேலே கார்கள் செல்வதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத நிலையில், சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நெடுஞ்சாலையின் கீழ் சாதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஏன் பாலத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டன?
ஷுய்கோசி மேம்பாலத்தின் கட்டுமானம் 1997-ல் நிறைவடைந்தது. அதன் பிறகு, குய்யாங் நகர நிர்வாகத்தின் முன் ஒரு பெரும் சிக்கல் எழுந்தது. 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அந்த நகரத்தில், ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கு ஒரு சிறு துண்டு நிலம் கூட மிஞ்சவில்லை. நகரத்தை வெளிப்புறமாக விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, நகரின் மையத்தில் உள்ள இந்த உயரமான பாலத்தின் கீழ் இருக்கும் காலி நிலத்தையே குடியிருப்பு கட்டிடங்களுக்காகப் பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்தது.
பாலம் கட்டி முடிக்கப்பட்டுச் சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் கீழ் சுமார் 10 பன்னடுக்குக் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டன; அவற்றில் சில பின்னர் 12 மாடிகளுக்கும் மேலாக விரிவுபடுத்தப்பட்டன. இதன் மூலம் ஏழை மக்களுக்கு நகரின் மையத்திலேயே மலிவு விலையில் வீடுகள் கிடைத்தன, வேலைக்குச் செல்வதும் எளிதானது.
சத்தமும் அதிர்வும் – மக்களின் அன்றாட வாழ்க்கை
இந்த நன்மைகளுக்கு ஈடாக, மக்கள் சில சமரசங்களையும் செய்துகொள்ள வேண்டியிருந்தது. இந்தக் கட்டிடங்கள் பாலத்திற்கு மிக அருகில் இருப்பதால், இரவும் பகலும் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் இரைச்சலும், வாகனங்களின் எடையால் ஏற்படும் அதிர்வும் இந்த வீடுகளின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டன.
ஆரம்பத்தில், கார்களின் இரைச்சல் மற்றும் அசையும் சுவர்களின் சத்தம் காரணமாக மக்கள் இங்கு வாழ மாட்டார்கள் என்று நிபுணர்கள் நினைத்தார்கள். ஆனால் நிலைமை முற்றிலும் நேர்மாறாக அமைந்தது. காலப்போக்கில், ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் தனித்துவமான சூழலுக்குத் தங்களை மாற்றிக்கொண்டு, இந்த இரைச்சலையும் அதிர்வையும் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்டனர்.
நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை
மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, பின்னர் நிர்வாகம் இந்தப் பாலத்தில் கனரக மற்றும் பெரிய லாரிகள்செல்வதை முற்றிலுமாகத் தடை செய்தது. இதன் காரணமாக, இரைச்சலும் அதிர்வும் பெருமளவு குறைந்துள்ளன. ஆனாலும், இன்றும் கூட வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்லும்போது சுவர்கள் லேசாக அதிரத்தான் செய்கின்றன.
