சென்னை: காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர், தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பிறகு, அவர்கள் தவெகவில் இணைந்தனர்.
அதேபோல, இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளைத் தவிர, எஞ்சிய தொகுதிகள் குறித்து தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக வசம் இருந்த இரு தொகுதிகளையும், இந்தத் தேர்தலில் போட்டியிட்டு கைப்பற்ற வேண்டும் என்று இபிஎஸ் உறுதியோடு இருக்கிறார். அதேவேளையில், இந்த இரு தொகுதிகளையும் வென்று தங்களின் பலத்தை அதிகரிக்க தவெகவும் முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்., 17ம் தேதி கடைசி நாளாகும்.
செப்.,19ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த இரு தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
