தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னூர் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தெரிவித்ததாவது:-
இமானுவேல் சேகரன் போன்ற தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல. இவர்களெல்லாம் ஒரு இனத்திற்காகவும், விளிம்பு நிலை மக்களை உயர்த்தவும் பாடுபட்ட தேச தலைவர்கள். அவர்களின் நினைவு நாளில் கலந்துகொண்டது பாக்கியமானது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த அரசு தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதில் அர்த்தமில்லை.
மேட்டூர் அணையில் நீர் கொள்ளளவு முழுமையாக எட்டிய பிறகே கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் முதல்வர் உத்தரவிட்டு நீர் திறக்கப்பட்டுள்ளது. கடைமடை வரை நீர் செல்வதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இம்மானுவேல் சேகரானாருக்கு திருச்சியில் சிலை அமைப்பது தொடர்பான கோரிக்கையை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தற்பொழுது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிட முடியாது.
சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு மட்டுமே முழுமையான அதிகாரங்கள் உள்ளன. அவைக்குள் நடக்கும் விவகாரங்கள் குறித்து துணை சபாநாயகரான என்னால் கருத்து கூற இயலாது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வரவிருக்கும் இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் வெல்வதுதான் எங்களது இலக்கு. தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை தவெக வழங்கி வருகிறது. இளைஞர்கள் மற்றும் மக்களின் முழு ஆதரவோடு அனைத்து தேர்தல்களிலும் த.வெ.க வாகை சூடும்.
முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அந்த குற்றங்களுக்கு, முன்னாள் முதலமைச்சர் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். குற்றத்தின் வீரியத்தை பொறுத்து கைது செய்யப்படலாம். பிரதமர் வேட்பாளர் குறித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்ற புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
