தஞ்சாவூர்: எந்தப் பணிகளை மேற்கொண்டாலும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் என்று புதிய தலைமைச் செயலக திட்டம் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; இது முதல்முறை அல்ல. நீண்ட நெடுங்காலம் எதிர்க்கட்சிகள் சொல்லிக் கொண்டு இருப்பது தான். முதன் முதலில் திமுக அந்த அலுவலகத்தை கட்டுகின்ற போது, ஏன் இது இருக்கும் இடத்திலேயே இருக்கலாம் என்றார்கள். அதன்பிறகு, ஜெயலலிதா வந்த பிறகு, அது மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஜெயலலிதா இருக்கும் போதே, இங்கு புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று ராணி மேரி கல்லூரி அருகே மேற்கொண்டார்கள். அப்போதும் தடை ஏற்பட்டது. மத்திய அரசு மூலமாக எதிர்க்கட்சிகள் தான் அந்தத் தடையை உருவாக்கினார்கள்.
தற்போது, எந்தப் பணிகளை தொடங்கினாலும், அதற்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்கிறது. இப்போது, இருக்கும் தலைமை செயலகம் நான்கரை ஏக்கரில் மட்டும் தான் இருக்கிறது. அனைத்து பணிகளும் ஆற்றுவதற்கு போதுமான இடவசதி இல்லை என்பதால் தான், புதிய தலைமை செயலகத்தை கட்ட வேண்டும் என்று முதல்வர் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
நீங்கள் சொல்வதைப் போல, ஒவ்வொருவரும், ஒரு கருத்துக்களை சொல்லும் போது, எந்த இடத்தில் எதைக் கொண்டு சென்றாலும் எதிர்ப்பு வரத்தான் செய்யும். டவர் போட்டாலோ, பில்டிங் கட்டினாலோ, பைப்லைன் போட்டாலும் வேண்டாம் என்று தான் சொல்லுவார்கள். இது இயற்கையாகவே இருக்கும் எண்ணங்கள் தான். ஆனால், எல்லோரும் மனம் திறந்து புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள், இவ்வாறு அவர் கூறினார்.
