“ஒரு கேட்ச்… ஒரு பொய்!” ஹர்மன்ப்ரீத் பெயரில் வைரலான AI வீடியோ சொல்லும் எச்சரிக்கை!

கிரிக்கெட் போட்டியில் இப்படியொரு கேட்ச்சை பார்த்தால், ஒரு நிமிடம் நம்மாலேயே நம்ப முடியாது. ஓடிவரும் வீராங்கனை… திடீரென தலைகீழாகச் அந்தர்பல்டி (backflip ) அடித்து கேட்ச் பிடிக்கிறார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் எடுத்த கேட்ச் என்ற தகவலுடன் வீடியோ பலராலும் பகிரப்பட்டது. அதிலும், சிலர் இந்த அசாத்திய கேட்ச்சை ஹர்மன்ப்ரீத் கவுர் பிடித்ததாகக் குறிப்பிட்டனர்.

ஆனால், இங்கு தான் ட்விஸ்ட்!!

இந்தக் காட்சி உண்மையான கிரிக்கெட் போட்டியில் நடந்தது அல்ல. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ இது.

“ஒரு வீடியோவை உருவாக்கிவிட்டால் என்ன பெரிய பாதிப்பு வந்துவிடும்?” என்று நாம் சாதாரணமாகக் கடந்து செல்லலாம். ஆனால், இந்த ஒரு வீடியோவே AI தொழில்நுட்பம் எவ்வளவு நிஜமாகத் தோன்றும் காட்சிகளை உருவாக்க முடியும் என்பதைப் புரிய வைக்கிறது.

Ai ima

இப்போது ஒரு நபர் உண்மையில் செய்யாத விஷயத்தை, அவர் செய்தது போல ஒரு வீடியோவில் காட்ட முடியும். முகம், குரல் உள்ளிட்டவற்றைத் தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி, நடக்காத சம்பவத்தைக்கூட நடந்ததாக நம்ப வைக்க முடியும். இப்படியான போலி வீடியோக்கள்தான் ‘Deepfake’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த வீடியோ வேடிக்கைக்காகப் பகிரப்பட்டிருக்கலாம். ஆனால், இதே தொழில்நுட்பம் ஒருவரின் பெயரையும் நற்பெயரையும் பாதிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டால் நிலைமை வேறு. இதனால் தவறான தகவல்கள் வேகமாகப் பரவுவதுடன், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

அப்படியென்றால் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை எப்படி நம்புவது?

அசாத்தியமாகத் தெரியும் காட்சிகளை உடனே நம்பாமல், அது எங்கு வெளியானது, உண்மையான போட்டியில் அந்த சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பொதுவெளியில் தேவையில்லாமல் பகிர்வதையும் தவிர்க்கலாம். .

ஹர்மன்ப்ரீத் கவுர் பெயரில் வைரலான இந்த வீடியோ, ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறது.

கண்ணால் பார்ப்பதெல்லாம் உண்மை இல்லை… AI காலத்தில், “உண்மையா?” என்று கேட்பதும் ஒரு பாதுகாப்புதான்!



Source link