ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்ற ஏமாற்று வேலையில் ஈடுபட மாட்டோம் – த.வெ.க

நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு என த.வெ.க அறிக்கை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், த.வெ.க.,வும் தனது அறிக்கையில் மத்திய அரசை விமர்ச்சித்து எதுவும் கூறவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக த.வெ.க அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் த.வெ.க ஒருபோதும் ஈடுபடாது. 

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, சிறப்பு பொதுப் பட்டியல் (Special Concurrent list) உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார். 

மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், த.வெ.க மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link