பெய்ஜிங்: பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் தங்கம், வெள்ளி மற்றும் பல விலைமதிப்பற்ற கனிமங்கள் நிறைந்த மாபெரும் புதிய பகுதி ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆழ்கடல் ஆராய்ச்சி குறித்த தகவல்கள் தற்போது உலகளவில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
கடலுக்கு அடியில் இவ்வளவு பெரிய அளவில் தாதுக்கள் இருப்பது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சீனாவின் புகழ்பெற்ற சிங்குவா பல்கலைக்கழகம், கிங்தாவ் கடல்சார் நிலவியல் நிறுவனம் மற்றும் ஷாங்காய் ஜியாடோங் பல்கலைக்கழகம் ஆகிய முக்கிய நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் இணைந்து இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இவர்கள் ‘ஷியாங்யாங்ஹாங் 10’ என்ற சீன பெருங்கடல் ஆராய்ச்சி கப்பலில் சென்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி சீனாவின் ஷென்சென் துறைமுகத்தில் இருந்து இந்த அறிவியல் ஆராய்ச்சி குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். 18 நாட்கள் நீடித்த இந்த நீண்ட பயணத்தின் போது, அவர்கள் நவீன நீர்மூழ்கி வாகனங்கள் மூலம் கடலுக்கு அடியில் 7 முறை ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொண்டனர். மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள சீனாவுக்கு சொந்தமான பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட ஒரு ஆழ்கடல் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆராய்ச்சியின் முக்கிய மைல்கல்லாக, கடலுக்கு அடியில் சுமார் 700 முதல் 1,500 மீட்டர் ஆழத்தில், அதிக வெப்பம் வெளியிடும் பல நீரூற்றுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த நீரூற்றுகளில் வெளிவரும் தண்ணீரின் வெப்பநிலை 315 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உள்ளது. இந்த தீவிரமான இயற்கை செயல்பாடுகள் காரணமாக அங்கு பல கனிமங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.
ஏற்கனவே இந்த பகுதியில் விஞ்ஞானிகள் 10 முறைக்கும் மேலாக சிறிய அளவிலான ஆய்வுகளை நடத்தி இருந்தனர். அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் தற்போது இந்த துல்லியமான மற்றும் பெரிய அளவிலான ஆய்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கனிமத் தாதுக்கள் மூன்று பெரிய கூம்பு வடிவ பாறை அமைப்புகளாகக் காணப்படுகின்றன.
கப்பலில் உள்ள நவீன ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கனிமத் தாதுக்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் அளவு நிலத்தில் கிடைப்பதை விட பல மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஒரு டன் கனிமத் தாதுவில் 15.4 கிராம் வரை தங்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், வெள்ளியின் அளவு ஒரு டன்னுக்கு 1,271 கிராம் வரை மிக அதிகமாக உள்ளது. இது தவிர செம்பு மற்றும் துத்தநாகம் போன்ற முக்கியமான பொருளாதார தாதுக்களும் இந்த பகுதியில் அதிக அளவில் உள்ளன. இந்த வளங்கள் உலகத் தரம் வாய்ந்த ஆழ்கடல் கனிம வைப்புத் அளவுக்கு இணையாக இருக்கலாம் என்று முதற்கட்ட கணிப்புகள் கூறுகின்றன.
யூரேசிய தட்டு மற்றும் பிலிப்பைன் கடல் தட்டு ஆகிய இரண்டும் சந்திக்கும் எல்லைப் பகுதிக்கு அருகில் இந்த கடல் பகுதி அமைந்துள்ளது. இங்கு பூமியின் நிலநடுக்கத் தட்டுகள் அடிக்கடி நகர்வதால் எரிமலை செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். கடல் நீர் கடலின் அடிப்பகுதியில் உள்ள வெடிப்புகள் வழியாக உள்ளே சென்று, அங்குள்ள மேக்மா (Magma) எனப்படும் உருகிய பாறைக்குழம்பு மூலம் தீவிரமாக சூடேற்றப்படுகிறது.
இவ்வாறு சூடான தாதுக்கள் நிறைந்த தண்ணீர் மீண்டும் மேலே வரும்போது, குளிர்ந்த கடல் நீருடன் கலந்து திடமான சல்பைடு கனிமங்களாக மாறுகிறது. காலப்போக்கில் இவை ஒன்றாக சேர்ந்து பெரிய கனிமப் பாறைகளாக மாறுகின்றன. இந்த இயற்கையான செயல்முறையின் மூலமாகத்தான் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் அங்கு பெருமளவில் குவிந்துள்ளன.
இந்த அதிக வெப்பம் வீசும் நீரூற்றுப் பகுதிகளில் இறால்கள், நண்டுகள், சங்கு வகைக் கிளிஞ்சல்கள் மற்றும் கடுமையான சூழலிலும் வாழக்கூடிய சில விசித்திரமான நுண்ணுயிர்கள் வாழ்வதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்துள்ளனர். சூரிய வெளிச்சமே இல்லாத இந்த ஆழ்கடல் பகுதியில், ரசாயன எதிர்வினைகள் மூலம் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி இந்த உயிரினங்கள் வாழ்வது விஞ்ஞானிகளுக்கு பெரும் வியப்பை அளித்துள்ளது. கடுமையான சூழலில் உயிர் வாழும் முறைகளைப் படிக்க இந்த உயிரினங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இவ்வளவு விலைமதிப்பற்ற தங்கம், வெள்ளி மற்றும் செம்பு வளங்கள் கடலுக்கு அடியில் இருந்தாலும், அவற்றை இப்போது உடனடியாக வெட்டி எடுக்க முடியாது என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்துகிறார்கள். ஆழ்கடல் பகுதியில் உள்ள கடுமையான அதிகப்படியான நீரின் அழுத்தம், மற்றும் மிகவும் சிக்கலான புவியியல் சூழ்நிலைகள் காரணமாக தற்போதைய நிலையில் அங்கு சுரங்கம் அமைத்து கனிமங்களை எடுப்பது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மேலும் வளரும் போது இது குறித்து பரிசீலிக்கப்படலாம்.
எப்படியிருப்பினும், இந்த ஆழ்கடல் கண்டுபிடிப்பு அறிவியல் உலகிலும், கடல்சார் ஆராய்ச்சிகளிலும் ஒரு புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
