சென்னை: கட்டட அனுமதி அடிப்படையில், வீடு மற்றும் வணிக கட்டடங்களுக்கான சொத்து வரி மதிப்பீடு மேற்கொள்ள, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில், சொத்து வரி வசூல் தான் பிரதான வருவாய் ஆதாரமாக உள்ளது. தமிழகத்தில் நீண்ட காலமாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது.
மாற்று வழி கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2022ல் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன்பின், ஆண்டுதோறும் உயர்த்த, உள்ளாட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில், சில மாநகராட்சிகளில் சொத்து வரி மதிப்பீடு முறையாக நடக்கவில்லை என்றும், அதனால் வருவாய் கசிவு ஏற்படுவதாகவும், தமிழக அரசு கருதுகிறது. இதற்காக, சொத்து வரி மறுமதிப்பீடு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இதன்படி, சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மதிப்பீட்டை சீரமைக்கும் பணிகள், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதனால், பலருக்கும் சொத்து வரி அதிகமாக வருவதாக புகார் எழுந்தது.
இதற்கு பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்நடவடிக்கையை மாநகராட்சி ஒத்திவைத்தது. சொத்து வரி மதிப்பீட்டில் காணப்படும் குறைகளை நீக்க வேண்டும் என்பதுடன், இதனால் ஏற்படும் வருவாய் கசிவை தடுக்க, அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் சொத்து வரி மதிப்பீட்டில் வருவாய் கசிவை தடுக்க, மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காலத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
‘ஆன்லைன்’ வசதி இந்த கமிட்டியின் பரிந்துரை, 2020ல் அரசுக்கு அளிக்கப்பட்டது. அதில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி வருவாய் கசிவை தடுக்க, மதிப்பீட்டை துல்லியமாக்க வேண்டும்.
இதற்காக, அனைத்து வகை கட்டடங்களுக்கும் அனுமதி அளிக்கும்போது, கட்டட பரப்பளவு விபரத்தை, சொத்து வரி மதிப்பீட்டு பிரிவுக்கு தானியங்கி முறையில் கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு, ஒவ்வொரு கட்டடத்துக்கும் சொத்து வரி மதிப்பீட்டை மேற்கொண்டால், வருவாய் கசிவை தடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், கட்டட அனுமதி அளிக்கும் விபரங்கள், சொத்து வரி வசூல் பிரிவுக்கு கிடைப்பதற்கான, ‘ஆன்லைன்’ வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதிய கட்டடங்கள் மட்டுமல்லாது, பழைய கட்டடங்களுக்கும், வரைபடங்கள் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீட்டை துல்லியமாக்க நடவடிக்கை எடுக்க திட்ட மிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
