’கமிஷனர் பேசுறேன், கம்மி விலைக்கு ஃபர்னிச்சர் வேணுமா?’ பெங்களூருவில் அம்பலமான சைபர் மோசடி கும்பல்

பெங்களூருவில் உயர் காவல்துறை அதிகாரியின் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கை உருவாக்கி, இடமாற்றம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் (CRPF) கமாண்டன்ட்டின் வீட்டு உபயோகப் பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்த சைபர் மோசடி கும்பலை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுவன் ஒருவனைப் பெங்களூரு காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

கடந்த மே மாதம் பதிவு செய்யப்பட்ட சைபர் மோசடி வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சிட்டி துணை ஆணையர் (DCP) எம்.நாராயணாவின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் போலியான ஃபேஸ்புக் கணக்கை உருவாக்கியுள்ளனர்.

ஆங்கிலத்தில் வாசிக்க

இந்த கணக்கின் மூலம் அதிகாரிக்குத் தெரிந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நண்பர் அழைப்பு (Friend Request) அனுப்பி, நம்பிக்கையைச் சம்பாதித்த பிறகு பல்வேறு காரணங்களைக் கூறி பணம் பறிக்க முயன்றுள்ளனர். இது குறித்து டிசிபி நாராயணா அளித்த புகாரின் பேரில் ஹெப்பகோடி காவல்துறையினர் மே 16 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் இந்த போலி கணக்கு மூலம் ஏமாற்றப்பட்டதாகப் புகார்கள் அளித்துள்ளனர். பாணசவாடி, கார்வார் உள்ளிட்ட பல இடங்களிலும் இது தொடர்பான புகார்கள் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானில் சிக்கிய சிறுவன்

தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், இந்த மோசடியின் பின்னணியைக் கண்டறிந்து ராஜஸ்தானின் கோட்குர்ட் (Kotakurd) கிராமத்திற்குச் சென்றனர். அங்கு ஆகஸ்ட் 24 அன்று இந்த கும்பலுடன் தொடர்புடைய சிறுவன் ஒருவனைப் பிடித்துள்ளனர்.

விசாரணையில், அந்தச் சிறுவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மூத்த ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளின் பெயர்களில் பல போலி ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கியதை ஒப்புக் கொண்டுள்ளான்.

பாதிக்கப்பட்டவர்களை அணுக இந்த கும்பல் ஒரு புதுமையான முறையைக் கையாண்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் (CRPF) கமாண்டன்ட் ஒருவர் தனது வீட்டிலுள்ள விலைமதிப்பற்ற மரச்சாமான் (Furniture) மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

உயர் அதிகாரியின் பெயரில் பேசியதால் இதை உண்மை என நம்பிய பொதுமக்கள், அந்தப் பொருட்களை வாங்குவதற்காகப் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளனர். பிடிபட்ட சிறுவனிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த மோசடி ஒரே இடத்தோடு முடியாமல் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ள பெரிய நெட்வொர்க் எனப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு உயர் அதிகாரிகளின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி நம்பிக்கையை ஏற்படுத்தி ஏமாற்றும் பெரிய கும்பல் இயங்கி வருகிறது. பிடிபட்ட சிறுவன் இந்த அமைப்பில் முக்கிய நபர். தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

பிடிபட்ட சிறுவன் ஆகஸ்ட் 25 அன்று சிறுவர் நீதி வாரியத்தில் (Juvenile Justice Board) ஆஜர்படுத்தப்பட்டுச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

பொதுமக்களுக்குக் காவல் துறை எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் மூத்த அரசு அதிகாரிகளின் பெயரில் வரும் கணக்குகளின் நம்பகத்தன்மையை தீர விசாரித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய கணக்குகளில் இருந்து வரும் கோரிக்கைகளை நம்பி பணப் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் பெங்களூரு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Source link