கர்ப்பம் முதல் ‘ஜெயிலர் 2’ பாடல் வரை.. நடிகை பூர்ணா பகிர்ந்த சுவாரசிய தகவல்!

சென்னை,

சமீபத்திய பேட்டியில் பேசிய பூர்ணா, திருமணம் அல்லது குழந்தை பெற்ற பிறகு நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று பொதுவாக கூறப்படுவதாக தெரிவித்தார். ஆனால் தனது விஷயத்தில் அப்படி எந்த இடைவெளியும் ஏற்படவில்லை என்று பேசியுள்ளார்.

மீண்டும் இணைந்த ரஜினி – நெல்சன் கூட்டணி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ உருவாகியுள்ளது. இதில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர் 2’

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வருகிற அக்டோபர் 15-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வைரலான ‘அல்ல போலேலோ’

இதற்கிடையே, ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘அல்ல போலேலோ’ சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலைப் போலவே, ‘அல்ல போலேலோ’ பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக வெள்ளை நிற சேலையில் பூர்ணா ஆடிய விதமும், பாடலுக்கு ஏற்ற வகையில் அவர் வெளிப்படுத்திய முகபாவனைகளும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.

கர்ப்பமாக இருந்தபோது நடனம்

இந்த நிலையில், ‘அல்ல போலேலோ’ பாடலில் நடனமாடியபோது தான் கர்ப்பமாக இருந்ததாக நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தது தனக்கே தெரியாமல் அந்தப் பாடலில் நடனமாடியதாக கூறிய அவர், பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு மற்றொரு படத்தில் நடிக்கச் சென்றபோதுதான் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.

‘தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்’

சமீபத்திய பேட்டியில் பேசிய பூர்ணா, திருமணம் அல்லது குழந்தை பெற்ற பிறகு நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று பொதுவாக கூறப்படுவதாக தெரிவித்தார். ஆனால் தனது விஷயத்தில் அப்படி எந்த இடைவெளியும் ஏற்படவில்லை என்றும், கதாநாயகியாக பிஸியாக இருந்த காலத்திலேயே திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்டு தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறியிருப்பதாகவும், ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வாழ்ந்து வருவதாகவும் பூர்ணா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Source link