1963-1964ஆம் ஆண்டில் இந்தியா வந்த இங்கிலாந்து டெஸ்ட் அணி, முதல் போட்டியை சென்னையில் விளையாடியது. இப்போட்டிதான், வரலாற்றில் இடம்பிடித்து அசத்தியது.
அந்த கால கட்டத்தில், இங்கிலாந்து டெஸ்ட் அணிதான் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தியது. அந்த சமயத்தில், இந்திய பௌலர் ஒருவர், இங்கிலாந்திற்கு எதிராக தொடர்ச்சியாக அதிக மெய்டண்களை வீசி பிரமிக்க வைத்தார்.
இந்த முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, ஓபனர் புதி குந்தரன் 192 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், அடுத்தடுத்து திலிப் சர்தேசாய் (65), விஜய் மஞ்சுரேக்கர் (108), ஜெய்ஷிம்மா (51) ஆகியோர் பெரிய ரன்களை அடித்ததால், இந்திய அணி, 162 ஓவர்களை எதிர்கொண்டு 457/7 ரன்களை சேர்த்து, டிக்ளேர் அறிவித்தது.
அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணியில், பிரையன் பொலுஸ் (88), டான் வில்சன் (42), கென் பேரிங்டன் (80), ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இங்கிலாந்து அணி 317/10 ரன்களை எடுத்து, 140 ரன்கள் பின் தங்கியது.
பாபு நட்கர்னி அபாரம்: இந்த முதல் இன்னிங்ஸில், இந்திய அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் பாபு நட்கர்னி தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி பிரமிக்க வைத்தார். இவரது பந்துகளை அடிக்கவே பயந்தனர். தொடர்ச்சியாக 21 மெய்டண் ஓவர்களை வீசி வரலாற்று சாதனையை படைத்தார். மொத்தமாக 32 ஓவர்களை வீசிய அவர், 27 மெய்டண்கள் உட்பட வெறும் 5 ரன்னைதான் விட்டுக்கொடுத்தார். இருப்பினும், ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 30 ஓவர்களை வீசி, 0.15 எகனாமியில் மட்டும் ரன்களை விட்டுக்கொடுத்த ஒரே பௌலராக இவர் இருக்கிறார். இந்த முதல் இன்னிங்ஸில், சந்து போர்ட் 67.4 ஓவர்களை வீசி, 30 மெய்டண்கள் உட்பட 88 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இந்தியா, 2ஆவது இன்னிங்ஸ்: 140 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில், எந்த பேட்டரும் 40 ரன்னை கூட அடிக்கவில்லை. புதி குந்தரன் (38), ஜெய்ஷிம்மா (35) ஆகியோர் மட்டுமே பெரிய ரன்களை அடித்தார்கள். மற்றவர்கள் சொதப்பியதால், இந்திய அணி, 152/9 ரன்களை மட்டும் எடுத்து டிக்ளேர் அறிவித்து, இங்கிலாந்து அணிக்கு, 293 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், கேப்டன் மைக் ஸ்மித் (57), ஜிம் பார்க்ஸ் (30), ஜான் மோர்டிமோர் (73) ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடினார்கள். இங்கிலாந்து அணி, 87 ஓவர்களில் 241/5 ரன்களை எடுத்து விளையாடி வந்தபோது, 5ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், இப்போட்டி டிரா ஆனது.
இந்த 2ஆவது இன்னிங்ஸில், பாபு நட்கர்னிக்கு 6 ஓவர்கள்தான் வீச வாய்ப்பு கிடைத்தது. இதில், அவர் 4 மெய்டண்களை வீசி, 6 ரன்னை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
