திருச்சி சமயபுரம் கே. இராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியின் 14-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், கே. இராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும் கல்லூரி வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் 2021–2025 ஆம் ஆண்டின் இளநிலை மற்றும் 2023–2025 ஆம் ஆண்டின் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வெறும் சிமெண்ட் சிலைன்னு நெனச்சி கீழ போட்டாங்க; ஆனா இன்னைக்கு ரூ.4,000 கோடிக்கு போகும்; இந்த தங்க புத்தர் எங்க இருக்கார் தெரியுமா?
நிகழ்ச்சியின் தொடக்கமாக கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரையாற்றி, கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். அதனைத் தொடர்ந்து கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் வாசுதேவன் தனது கல்லூரியின் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.
இவ்விழாவிற்குத் தலைமை தாங்கி பேசிய ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்களின் தலைவர் கே.இராமகிருஷ்ணன், “பட்டதாரிகள் அனைவரும் பெற்றோரை மதித்து கௌரவிக்க வேண்டும்.
யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். மேலும், அன்பு, பணிவு மற்றும் சேவை மனப்பான்மையோடு சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகச் சென்னையின் புரோடாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் பணியாளர் திறன் மாற்றத்துறை துணைத் தலைவர் ஆர்.வெங்கடாசலம் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துரையாற்றினார்.
“பட்டதாரிகள் தங்களுடைய 30 ஆண்டு காலத் தொழில் பயணத்தைத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். முதல் 10 ஆண்டுகளில் வலுவான தொழில்முறை அடித்தளத்தையும், அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்சார் தொடர்புகளை விரிவுபடுத்தி முன்னேற்றத்தையும், இறுதி 10 ஆண்டுகளில் தலைமைத்துவத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், நிதி மேலாண்மை, சேமிப்பு மற்றும் ஃபையர் கொள்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்கள் திறன்களைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்களின் செயல் இயக்குநர் எஸ்.குப்புசாமி தலைமையில் பட்டதாரிகள் தொழில்முறை நெறிமுறைகளையும், சமூகப் பொறுப்பையும் நிலைநிறுத்துவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் கே. இராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 60 பல்கலைக்கழகத் தரவரிசை பெற்ற மாணவர்கள் உட்பட 657 பேருக்கும், கே. இராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 41 பல்கலைக்கழகத் தரவரிசை பெற்ற மாணவர்கள் உட்பட 502 பேருக்கும் என மொத்தம் 1,159 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறைத் தலைவர் எஸ்.முகமது ஜான்ஷா நவாஸ், துறைத் தலைவர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்
