கோவை: கோவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபரை சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்ற போது, காவல் ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற தவசி என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காவல் ஆய்வாளர் மற்றும் கைதான நபருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் தெற்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதில் இளைஞர்கள் சந்தோஷ் (வயது 24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் தான் நேற்று இரவு சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று மறைவான பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கைதான வாலிபர்களிடம் விசாரித்த போது சிறுமியை அரிவாளை காட்டி மிரட்டி அழைத்து சென்றதாக கூறினர். இதனை காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருப்பதாகவும் கூறினர். இதையடுத்து காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையில் போலீசார் தவசி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் அப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது தவசி என்பவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காண்பித்த போது திடீரென காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார்.. இதனால் பதறிப்போன போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது மீண்டும் அரிவாளை கொண்டு ஓங்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் தற்காப்புக்காக போலீசார் தவசியை சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதே போன்று அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
