சட்டமன்றத்தில் கண்ணீர் விட்ட சபாநாயகர்; உருக்கமாகப் பேசிய முதல்வர்

தெலுங்கானா மாநிலச் சட்டசபையில் சபாநாயகர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில், சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி ’பாரத் ராஷ்டிர சமிதி’ (பி.ஆர்.எஸ்.) கட்சியினர் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். 

அப்போது அவர்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் உருவானது. இதையடுத்து, கே.டி.ராமராவ், ஹரிஷ் ராவ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே, அவைக்குள் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் தாடா மது, சபாநாயகர் கட்டம் பிரசாத் குமாரை ஒருமையில் பேசி அவதூறு பரப்பியதாகக் காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த சபாநாயகர் பிரசாத் குமார், அவையிலேயே இருக்கையில் அமர்ந்தபடி கண்ணீர் வடித்துக் கதறி அழுதார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, ”இது தெலுங்கானாவின் வரலாற்றில் மிக இருண்ட நாள். இது 4 கோடி மக்களுக்கும் இழைக்கப்பட்ட பெரும் அவமானம்.  

சபாநாயகரின் குடும்பத்தினரையும் தரக்குறைவாகப் பேசியிருப்பது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். அரசியலமைப்பு பதவியில் உள்ள பட்டியலினத் தலைவரை அவமதித்ததை ஜனநாயக சமூகம் ஏற்காது” என்று உருக்கமாகப் பேசினார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.  

Source link