சட்டமன்ற நிகழ்வுகள்.. கலைஞர் மீது எந்த அளவுக்கு அச்சம்.. தவெக அரசை கடுமையாக அட்டாக் செய்த தங்கம் தென்னரசு – former dmk minister thangam thennarasu harshly criticized tvk government

இன்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளித்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிராக அவைத்தலைவர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனாலும் கடைசி வரை எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்

இந்நிலையில் இன்றைய தினம் சட்டப்பேரவையில் நடந்தவை குறித்து திமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதில் நாள்தோறும் வெளியாகும் கொலை மற்றும் குற்றச் செய்திகள் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்தளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பதற்கு போதுமான சாட்சியாக உள்ளன. மக்களுடைய உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் ஒரு அரசுடைய அடிப்படைக் கடமை.

எதிர்க்கட்சியை தாக்குவதற்கான வசனங்கள்

ஆனால் குற்றங்களை தடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் பதிலான எதிர்க்கட்சியை தாக்குவதற்கான வசனங்களை தயாரிப்பதிலேயே அதிக அக்கறையினை இந்த முதலமைச்சரும், அரசும் காட்டுவதாக தெரிகிறது. சட்டம்-ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நேரத்தில், பழைய அவதூறுகளை தூசிதட்டி எடுப்பது, இன்றைய தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தினை திசைதிருப்பும் முயற்சியாக தான் பார்க்கப்படுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

கலைஞர் மீது எந்தளவுக்கு அச்சம்

தொடர்ந்து தலைவர் கலைஞர் வாழ்ந்த காலத்தில் அவர்மீது வீசப்பட்ட அதே பழைய அவதூறுகளை, இன்று புதிதாக அரசியலுக்கு வந்துள்ளவர்களும் பயந்து கையில் எடுக்கிறார்கள். அப்படியென்றால் கலைஞர் மீது அவர்களுக்கு எந்த அளவுக்கு அச்சம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கழகத்திற்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் மிசா சிறைக் கொடுமையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர்.

ஜனநாயகம் பாதாளத்திற்கு சென்று விட்டது

ஜனநாயகம் என்றால் என்ன என்பதை தன்னுடைய போராட்ட வரலாற்றால் நிரூபித்த இயக்கம் திமுக. ஆனால் இன்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் தோல்விகளை எங்கே அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றி விடுவாரோ என்ற அச்சத்தில், அவருடைய நேரடியான விவாதத்தையே தவிர்க்கும் அளவுக்கு ஜனானயகம் பாதாளத்திற்கு போய் விட்டது. இவ்வாறு தன்னுடைய பதிவில் இன்றைய சட்டமன்ற நிகழ்வு குறித்து பதிவிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.

கனிமொழி கண்டனம்

இதற்கிடையில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழியும் தலைவர் கலைஞர் மற்றும் திமுகவை பற்றி அவதூறாக பேசுவதையே அரசியல் தகுதி என இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும் என பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதிமுக MLA-வை கலாய்த்த செங்கோடையன்…சபாநாயகர் குடுத்த ரியாக்‌ஷன்

இதே போன்று திமுக எம்.எம். அப்துல்லா, டி.ஆர்.பி. ராஜா ஆகியோரும் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றி தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகளை பகிர்ந்துள்ளனர். அவை சோஷியல் மீடியாவில் பெருமளவில் கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Source link