மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் விஜய் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். ‘நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்’ என முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. ஆண்டுதோறும் அணையின் நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருக்கும் போது, பாசனத்துக்கு நீர் திறக்கப்படும்.
இதன் மூலம், 13 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கரில் குறுவை, தாளடி, சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்படும்.
கபினி அணை
அணை கட்டி, 93ம் ஆண்டு நடக்கும் நிலையில், இதுவரை குறித்தபடி ஜூன் 12ல், 20 முறை, முன்னதாக, 11 முறை, தாமதமாக, 61 முறை என, 92 ஆண்டுகள் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜூன் 12ல், அணையின் நீர்மட்டம், 79.56 அடியாக இருந்ததால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை.
கடந்த, ஆகஸ்ட் 1ல், கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்தது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீரை, முதல்வர் விஜய் நேற்று காலை, 11:40 மணிக்கு திறந்து வைத்தார். முதற்கட்டமாக, வினாடிக்கு, 3,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர் திறப்பு, 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
வெளியேற்றம்
நிகழ்வில், அமைச்சர்கள் ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் மு.வடநெரே, முதன்மை பொறியாளர் கோபால கிருஷ்ணன், சேலம் கலெக்டர் இளம் பகவத், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயகுமாரி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், சிவகுமார், பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, முதல்வர் சார்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டூர் அணை நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பாசன தேவைக்கு ஏற்ப, நீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப் படுத்தப்படும்.
இது தொடர்பாக, வேளாண்மை, நீர்வளம், வருவாய் துறைகள், மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேட் டூர் அணையில் இருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி நீரும், விவசாயிகளின் நலனுக்காக, முறையாக பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.
காவிரி ஆறு மற்றும் கால்வாய்களின் வழித்தடங்களில், சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் வாயிலாக, தண்ணீர் உறிஞ்சுதல், அனுமதியின்றி நீர் எடுத்தல், அனுமதிக்கப்பட்ட நீரேற்று திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நீர் எடுப்பது போன்றவை கண்டிப்பாக தடுக்கப்படும்.
இதற்காக, நீர்வளம், வருவாய், காவல், மின்சார துறை அலுவலர்களை கொண்ட கூட்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு – பகலாக ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கத்தை கருத்தில் வைத்து, தற்போது நீர் திறப்பது, வரையறுக்கப்பட்ட நீரை சிக்கனமாகவும், திறம்படவும் நிர்வகித்து, சம்பா சாகுபடியை பாதுகாப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும். எனவே, விவசாயிகள் குறைந்த நீர் தேவையுள்ள, மத்திய கால நெல் ரகங்களையும், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நீர் சிக்கன சாகுபடி முறைகளையும் பின்பற்ற வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம். சம்பா சாகுபடியை வெற்றி பெறச் செய்வோம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
