எழுதியவர்: அனந்தகிருஷ்ணன் ஜி
போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் போது, காவல்துறை அதிகப்படியான வன்முறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரித்து பொறுப்பேற்கச் செய்வதற்கு சிறப்பு விசாரணைக்குழுவை (எஸ்.ஐ.டி) அமைப்பது குறித்து பரிசீலித்தது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, போட்டித் தேர்வுகளின் கேள்வித்தாள் கசிவைக் கண்டித்து ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (சி.ஜே.பி) பேனரின் கீழ் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறையினர் ஒடுக்கிய டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளிடமும், மத்திய அரசிடமும் பதில்களைக் கோரியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பதில்களை ஆய்வு செய்த பிறகே, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாணவர் போராாட்டக்காரர்கள் மீது காவல்துறை அளவுக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை நீதிமன்றம் விசாரித்தது. போராட்டத்தின் போது காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினரும் சில பத்திரிகையாளர்களும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோஹனா ஆகியோர் அடங்கிய இந்த அமர்வு, “மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள், இச்சம்பவங்கள் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடத்துவதற்கு முதற்கட்டமாக வலுவான முகாந்திரத்தை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்தது.
போராட்டங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றப் பின்னணி இல்லாத மாணவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட மைனர் சிறுவர்களை விடுவிக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும், போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள், கேமரா பதிவுகள், ட்ரோன்கள், பாடிகேம்கள் மற்றும் வயர்லெஸ் உரையாடல்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் டிஜிட்டல் தகவல்கள், அவர்களைத் துன்புறுத்தப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையை மனுதாரர்கள் எழுப்பிய நிலையில், அத்தகைய தரவுகள் இந்த கட்டத்தில் பகிரங்கமாகாமல் இருப்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
தலைமை நீதிபதி கூறியது
சுதந்திரமான விசாரணையின் அவசியத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, “இது தொடக்கத்தில் மாணவர்களின் அமைதியான போராட்டமாகவே இருந்தது. இத்தகைய போராட்டங்களுக்கு அரசியலமைப்பு பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் இப்போது இரண்டு விஷயங்கள் நடந்துள்ளன: போராட்டத்தை நிறுத்த விரும்புபவர்கள் அதற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இரண்டாவதாக, காயமடைந்த காவலர்கள் சார்பாகவும் மனுக்கள் உள்ளன… எனவே ஏன் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்படக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.
“அதிமீறலில் ஈடுபட்டவர்கள், அப்பாவி மக்கள் மீது அத்துமீறல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்யும். அதற்கு முற்றிலும் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை தேவை. யாருக்கும் பொறுப்பு நிர்ணயிக்கப்படாவிட்டால் விசாரணைக்கு எந்த அர்த்தமும் இல்லை,” என்றும் அவர் மேலும் கூட்டினார்.
மனுதாரர்கள் கூறியது
மனுதாரர் சைலேந்திர மணி திரிபாதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் எலக்ட்ரிக் லத்திகள் பயன்படுத்தப்பட்டதாகக் சுட்டிக்காட்டி, உயர்மட்ட அதிகாரிகள் வரை இதற்கான பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார்.
ஜந்தர் மந்தர் பகுதியில் எந்த தடையும் விதிக்கப்படாதது, காவல்துறைப் பணியாளர்களிடம் பெயர் அட்டைகள் இல்லாதது மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சீருடை அணியாத காவல்துறையினரைப் பயன்படுத்தியது போன்ற சட்டப்பூர்வமான கேள்விகளை இந்தச் நிகழ்வுகள் எழுப்புவதாக சங்கரநாராயணன் கூறினார்.
2011-ல் ராம்லீலா மைதானப் போராட்டத்தின் போது இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள்வது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்ததை மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
மற்றொரு மனுதாரருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராசத், டெல்லியில் நடந்ததை விட பீகாரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நேர்ந்தது மிகவும் மோசமானது என்று குற்றம் சாட்டினார். போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களைத் திரும்பப் பெற மாநில அரசு முடிவு செய்த போதிலும், பெரும்பாலும் சிறுவர்கள் உட்பட சுமார் 150 பேர் இன்னமும் காவலில் உள்ளதாக அவர் கூறினார்.
ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உணவு வழங்கிய ஜூனைத் மாலிக் என்பவருக்காக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தனது கட்சிக்காரரை காவல்துறையினர் பிடித்து முசூரிக்கு அழைத்துச் சென்றதாகவும், அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு கூறியது
மத்திய அரசு சார்பில் ஆஜரான இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, போராட்டங்களின் போது நடந்த வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணமே தவிர மாணவர்கள் அல்ல என்பது தனது கருத்து என்று கூறினார்.
சுதந்திரமான விசாரணைக்கு அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறிய மேத்தா, காவல்துறை எந்தவித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்பதை மறுத்தார். டெல்லியில் போராட்டக் களத்திற்குள் நுழைந்த கொடூரக் குற்றவாளிகளும் விரும்பத்தகாத நபர்களும் காவல் துறையினரைத் தாக்கியதில் சுமார் 250 காவலர்கள் காயமடைந்ததாக அவர் கூறினார்.
எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டால், அதற்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்விக்கு, மனுதாரர்களோ அல்லது எதிர்மனுதாரர்களோ அல்லாமல், நீதிமன்றமே அதைத் தீர்மானிப்பதை தான் விரும்புவதாக மேத்தா பதிலளித்தார்.
காவல்துறை நடவடிக்கை ஆய்வில்
டெல்லியின் ஜந்தர் மந்தர் மற்றும் பல நகரங்களில் கேள்வித்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் கடந்த வாரம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. டெல்லியில், ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டத்தைக் கலைக்க பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதில் சிலருக்குக் பலத்த காயம் ஏற்பட்டதால் பாதுகாப்புப் படையினர் சிக்கலில் சலசலப்பில் உள்ளனர்.
பீகாரில், போராட்டங்களை அடக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர், மேலும் போராட்டத்தின் போது ஏகே-47 ரக துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 20-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 200 பேர் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று சிஜேபி (சி.ஜே.பி) அமைப்பிற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படாவிட்டால், மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று சி.ஜே.பி எச்சரித்துள்ளது.
