சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், 438 கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னை மாநகரின் நீர்ப்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சுழற்சி நீர்ப்பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தவும், கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் நாளொன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடுபரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மேலும் உயர்தரத்தில் சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான தரமான நீரை வழங்குவதாகும். இதன்மூலம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரின் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், தொழிற்சாலைகளுக்கு நிலையான மாற்றுநீர் ஆதாரம் உருவாக்கப்படுவதோடு, சென்னை மாநகரின் நீண்டகால நீர்ப் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோயம்பேட்டிலுள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேற்று (27.07.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அரசு தலைமைக் கொறடா ரா. சபரிநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த் எனப் பலரும் உடனிருந்தனர்.
