சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் எனக்கோரி சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.
தனித்தீர்மானம்
தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.
கடந்த மாதம் 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தமிழை முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் இன்று (வியாழக்கிழமை) தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். 2006-ல் தமிழை சென்னை ஐகோர்ட்டில் பயன்படுத்தக் கோரி சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மானியக்கோரிக்கை
அதனை தொடர்ந்து சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் வசமுள்ள காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை), தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. சட்டசபையில் அமைச்சர்கள் பதிலுரைக்கு முன்பாக அறிவிப்புகளை வெளியிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில் முதல்-அமைச்சர் விஜய் முதலில் துறைசார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அந்தந்த கட்சி தலைவர்கள் வரிசையாக இன்று பேசுவார்கள். அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) தனது பதிலுரையை வழங்குவார்.
