சென்னை: தொழிலதிபரான தன்னுடைய மாமனரை, ஸ்கெட் போட்டு கொன்றுவிட்டார் மருமகள் ஷாலு.. போலீசாரிடமும் சிக்கிவிட்டார்.. இதையடுத்து, மருமகள் ஷாலுவிடம் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் தயாராகி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை வெளியான தகவல்களை தாண்டி, கொலை செய்ய ஷாலு மேற்கொண்ட முயற்சிகள்தான் போலீசாருக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் வினீத் மனோச்சா.. இவரது மருமகள் ஷாலுவுக்கு இரவு நேர பார்ட்டிகளுக்கு செல்வதில் அதிக பிரியம்.. இதனால் அடிக்கடி பார்ட்டிகளுக்கு சென்றுவிட்டு, விடிகாலை நேரத்தில் வீடு திரும்புவாராம்.
இதை மாமனார் கண்டித்ததுடன், வீட்டில் CCTV கேமராக்களையும் பொருத்தி, மருமகளை கண்காணித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள் ஷாலு, மாமனாரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக முன்னாள் ஊழியர் விஷால் கவுதம் என்பவருடன் சேர்ந்து, இந்த கொலையை அரங்கேற்றினார்..
இதையடுத்து, இந்த வழக்கில் ஷாலு கைது செய்யப்பட்ட நிலையில், கொலை சதியில் இன்னும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாமனார் கொலை வழக்கில் ஷாலுவை 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் கேட்பதற்காக மட்டும் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை விசாரணை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
கொலைக்கான திட்டம் எப்போது தொடங்கியது, யாருடன் ஆலோசிக்கப்பட்டது, அதை செயல்படுத்த யார் யார் உதவினர், பணம் தொடர்பான ஏற்பாடுகள் எப்படி நடந்தன என்பது குறித்து ஒவ்வொரு கட்டமாகவும் விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கில், ஷாலுவுக்கும் விஷால் கவுதமுக்கும் இடையே இருந்த தொடர்பு போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. கடந்த மே 1-ம் தேதி முதல் கொலை நடந்த நாள் வரை, விஷால் கவுதமிடம், ஷாலு 309 முறை போனில் பேசினாராம்.. அதுமட்டுமல்ல, இதே காலகட்டத்தில் இந்த கொலை திட்டம் தொடர்பாக 49 வாட்ஸ்அப் மெசேஜ்களை விஷால் கவுதமுக்கு அனுப்பியிருக்கிறார் ஷாலு.. ஆனால், அத்தனை மெசேஜ்களையும் உடனுக்குடன் ஷாலு டெலிட் செய்து விட்டதால், அந்த மெசேஜ்களில் என்ன பேசப்பட்டது என்பதை மீட்டெடுக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, ஷாலு சுமார் 3 மாதங்களாகவே மாமனாரை கொலை செய்ய பிளான் போட்டு வந்தாராம்.. எனவே, விஷாலுடன் அவர் எப்போது முதல் நெருக்கமாக தொடர்பு கொள்ளத் தொடங்கினார், கொலை செய்யும் முடிவுக்கு அவரை எப்படி அழைத்துச் சென்றார், இந்த திட்டம் தொடர்பாக வேறு யாரிடமாவது பேசியிருக்கிறாரா என்ற விசாரணையும் தற்போது நடந்து வருகிறது.
அதேபோல, இந்த கொலை வழக்கில் இப்போது மிக முக்கியமாக பார்க்கப்படுவது ஷாலுவின் கணவர் சுப்ரத் மனோச்சாவின் ரோல் என்ன என்பதுதான்.. சுப்ரத்துக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை என்று போலீசார் இதுவரை கூறவில்லை. அவரது பங்கு குறித்தும் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. எனவே, அவரது செல்போன் அழைப்புகள், விஷால் கவுதமுடனான தொடர்புகள் உள்ளிட்ட தகவல்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏனென்றால், விஷாலுக்கு சுப்ரத் ஏற்கனவே 2 முறை தனியார் வேலை வாங்கித் தந்திருக்கிறாராம்.. அதனால் இந்த தொடர்புக்கும் கொலை சதிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்..
அதேபோல், கொலை நடந்த இரவில் ஷாலுவும் சுப்ரத்தும் மருந்து வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்தது குறித்தும் விசாரணை தொடர்கிறது. சுமார் 25 தம்பதிகள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி அதிகாலை 3 மணி வரை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் ஷாலுவும் சுப்ரத்தும் எந்த பதற்றமும் இல்லாமல் இயல்பாக இருந்ததாகவும், சாப்பாடு ஆர்டர் செய்து டான்ஸ் ஆடினார்களாம்.
எனவேதான், மேற்கண்ட அனைத்து சந்தேகங்களுக்கும், ஷாலுவை விசாரித்தால்தான், உண்மை தெரியவரும் என்று போலீசார் நம்புகிறார்கள்.. இதற்காகவே ஷாலுவிடம் கேட்பதற்கு 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்திருக்கிறார்களாம்.. இதற்கெல்லாம் பதிலை ஷாலு சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது…!!!
