டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வரி விதிப்புகளை தனது வர்த்தகக் கொள்கையின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வரும் நிலையில், அதிகரித்து வரும் வரி மற்றும் வர்த்தகத் தடைகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் கடுமையான கவலை தெரிவித்துள்ளன. அதிகப்படியான வரி கொள்கைகள் உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் பிரிக்ஸ் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியா தலைமையில் டெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நியூ டெல்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் வெளியிட்டுள்ள பிரகடனத்தில், ஒருதலைபட்சமான வரி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் வர்த்தகத்தை சீர்குலைப்பதுடன், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கும் முரணாக இருப்பதாக பிரிக்ஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உலக வர்த்தக அமைப்பு மூலம் ஒருங்கிணைப்பை அதிகரித்து, வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு விரைவாக பதிலளிக்கும் வகையில் உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதில் மேலும், “ஒருதலைபட்சமான வரி நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து தீவிர கவலை தெரிவிக்கிறோம். இவை வர்த்தகத்தை சீர்குலைப்பதுடன் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணாக உள்ளன. அதிகரித்து வரும் வரிகள், வர்த்தகத் தடைகள் மற்றும் பாதுகாப்புவாத கொள்கைகள் உலக நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் நிச்சயமற்ற சூழலை உருவாக்குகிறது.
இதனால் சர்வதேச விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படலாம். பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதுடன், சர்வதேச பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையக்கூடும். உலக வர்த்தக அமைப்பு தற்போது ஒரு முக்கியமான நிலையில் உள்ளது. வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதார நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப உலக வர்த்தக அமைப்பு செயல்பட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பிரிக்ஸ் நாடுகள் மீது டிரமப் தொடர்ந்து பாய்ந்தே வருகிறது. குறிப்பாக அமெரிக்க டாலரின் பயன்பாட்டை குறைப்பது குறித்து பிரிக்ஸ் நாடுகள் ஆலோசித்து வந்த நிலையில், அதை முன்பே டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். பிரிக்ஸ் நாடுகள் புதிய பொது நாணயத்தை உருவாக்கினாலோ அல்லது அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை ஆதரித்தாலோ, அந்த நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
அதாவது சர்வதேச நாடுகள் இப்போது வர்த்தகம் செய்யும்போது, டாலரில் தான் வர்த்தகம் செய்து கொள்ளும். இப்படி அமெரிக்காவை நம்பி இருப்பதை தவிர்கவே புதிய நாணயத்தை உருவாக்குவது குறித்து பிரிக்ஸில் பேச்சு எழுந்தது. அதற்கே டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். அதேநேரம் பிரிக்ஸ் நாடுகள் பொது நாணயத்தை உருவாக்கும் முயற்சியை முன்னெடுக்கவில்லை. அதற்கு பதிலாக உறுப்பு நாடுகளின் சொந்த நாணயங்களைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் முறை குறித்து ஆலோசித்து வருகின்றன.
பிரிக்ஸ் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை போல ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பாக செயல்படுவதில் சவால்கள் உள்ளன. ஏனென்றால் உறுப்பு நாடுகளின் பொருளாதார நலன்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. அதேநேரம் பல பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்காவுடன் முக்கியமான வர்த்தக உறவுகளும் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் பொறுமையாகவே முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
