டெல்லியில் அடுக்கு மாடி விடுதி இடிந்து விழுந்து விபத்து; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: மீட்பு பணிகள் தீவிரம்

எழுதியவர்கள்: அலோக் சிங் , த்ரிஷ்டி ஜெயின் , சாக்ஷி சந்த் , சோபியா மேத்யூ

டெல்லியின் தௌலா குவான் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு எதிரே சத்ய நிகேதனில் மாணவர்களுக்கான தனியார் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஐந்து மாடிக் கட்டிடம் இன்று (செப்டம்பர் 6) பிற்பகலில் இடிந்து விழுந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

இந்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் ஜே.பி.என் அபெக்ஸ் டிராமா சென்டருக்கு (JPN Apex Trauma Centre) அழைத்து வரப்பட்டதாக எய்ம்ஸ் (AIIMS) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே உயிரிழந்திருந்தனர். மேலும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் பின்னர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

‘ஹாஸ்டல் டேஸ்’ (Hostel Daze) என்ற பெயரில் விடுதி இயங்கி வந்த இந்தக் கட்டிடம், குருகிராமைச் சேர்ந்த ஹரி ஓம் என்பவருக்குச் சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய சகோதரர்களான ஆனந்த் பன்சால் மற்றும் ஆசாத் பன்சால் ஆகியோர் இந்தக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள வெவ்வேறு நிலங்களையும் கட்டிடங்களையும் சொந்தமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கட்டிடத்தில் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகளும், அடித்தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த மண் தோண்டும் பணிகளும் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை வலுவிழக்கச் செய்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நானக்புரா குருத்வாரா அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து பிற்பகல் 1.34 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (PCR) அழைப்பு வந்ததாக தென்மேற்கு டெல்லி துணைக் காவல் ஆணையர் அமித் கோயல் தெரிவித்தார். குறைந்தது 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுவும் மீட்புப் பணியில் இணைந்தது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் மற்றும் அப்பகுதியில் உள்ள பல இளங்கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே சத்ய நிகேதன் பகுதி மிகவும் பிரபலமானதாகும். அப்பகுதியில் உள்ள தனியார் குடியிருப்புக் கட்டிடங்கள் பல விடுதிகளாகவோ அல்லது பேயிங் கெஸ்ட் (PG) தங்குமிடங்களாகவோ பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாடகைக்கு தங்கி வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடத்திலும் சில மாணவர்கள் வாடகைக்கு தங்கியிருக்கலாம் என்று கோயல் தெரிவித்தார். தனியார் விடுதியில் உள்ள அறைகளில் சுமார் 30 மாணவர்கள் தங்கியிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியைத் தொடங்கினர். Photograph: (Express Photo by Afshana Ali)

உயிரிழந்தவர்களில் குறைந்தது ஒருவராவது மாணவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கட்டிடத்தின் பெரிய கான்கிரீட் துண்டுகள் விழுந்ததில் சேதமடைந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களின் சரியான எண்ணிக்கை தற்போது தெரியவில்லை” என்று கோயல் தெரிவித்தார். மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் அப்பகுதி மக்களும் அதிகாரிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. “தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே சம்பவ இடத்துக்குச் சென்ற டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, பின்னர் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதற்கு யார் காரணமாக இருந்தாலும், அது கட்டிட உரிமையாளராக இருந்தாலும் அல்லது அதிகாரியாக இருந்தாலும், அவர்கள் யாரும் தப்ப முடியாது. கட்டிடம் பழமையானது, அதில் சில கட்டுமான மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. அடித்தளத்தில் ஒருவிதமான மண் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

south-delhi-building-collapse
தெற்கு டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்தது. Photograph: ((எக்ஸ்பிரஸ் புகைப்படம்: அபினவ் சாஹா))

இதன் காரணமாக ஒரு தூண் நகர்ந்து, ஒட்டுமொத்த கட்டிடமும் இடிந்து விழுந்துள்ளது. அந்தக் கட்டிடம் பி.ஜி தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்குள் மாணவர்கள் இருந்தனர். அனைத்து அமைப்புகளும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. முதலில் இந்த மாணவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே எங்களது முன்னுரிமை” என்று முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆர்.கே.புரம், சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்கதந்தி, கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து கவலை அளிக்கிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), டெல்லி தீயணைப்புத் துறை மற்றும் பிற மீட்புக் குழுவினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காங்கிரஸ் மற்றும் என்எஸ்யூஐ (NSUI) தொண்டர்கள் சம்பவ இடத்தில், மீட்புக் குழுவினருக்கு உதவ தயாராக இருக்கின்றனர்.

மேலும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதுமான விடுதி வசதிகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இதனால் மாணவர்கள் அதிக நெரிசலான பி.ஜி தங்குமிடங்களில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் ஒரே கூரையின் கீழ் சுமார் 40 பேர் வரை தங்க வேண்டி இருக்கிறது, ஒவ்வொரு மாணவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும், அவர்களின் உயிரை எந்தச் சூழலிலும் ஆபத்தில் ஆழ்த்தக் கூடாது என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் இருந்த தூண்கள் மற்றும் தாங்கு அமைப்பு ஒப்பீட்டளவில் வலுவிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்தனர். அடித்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட மண் தோண்டும் பணியும், கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் செய்யப்பட்ட மாற்றங்களும் அதன் கட்டமைப்பு உறுதித்தன்மையை பாதித்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் ஒரு வட்டாரம் தெரிவித்தது.

இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டதால், ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களை சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனரக இயந்திரங்களால் ஏற்படும் அழுத்தம் மற்றும் அதிர்வுகள் இடிபாடுகளை நகர்த்தி, அவற்றுக்குள் சிக்கியிருப்பவர்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, மீட்புக் குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். 

இடிபாடுகளை ஒவ்வொரு பகுதியாகக் கைகளால் அகற்றி, அதன் கீழ் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதைக் கண்டறிய கவனமாகக் கேட்டு வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்ற சம்பவம் 2022ஆம் ஆண்டிலும் சத்ய நிகேதனில் நடைபெற்றது. அப்போது இருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த மூன்று மாடிக் கட்டிடத்தின் மொட்டைமாடிப் பகுதி இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.



Source link