சென்னை: கேரள தங்கக் கடத்தல் புகழ் ஸ்வப்னா சுரேஷை நினைவிருக்கா? அவருக்குதான் இப்போது டும்டும்டும் நடந்துள்ளது.. ஆனால், இந்த திருமணத்தில் ஒரு சுவாரஸ்யம் இருக்கு.. ஸ்வப்னா திருமணம் செய்துகொண்டவர் யார் தெரியுமா? தங்கக் கடத்தல் வழக்கில் அவருடன் சேர்த்து பேசப்பட்ட அதே நபர்தான்..!!!
சில வருடங்களுக்கு முன்பு தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியமாக பேசப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ்… 2020-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தின் பெயரில் வந்த சரக்கில் தங்கம் கடத்தப்பட்டதாக எழுந்த வழக்கு, கேரள அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, தூதரக சரக்கு மூலம் சுமார் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தையே அதிர வைத்தது…
தங்க கடத்தல் ஸ்வப்னா சுரேஷ்
இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் பெயர்தான் முதன்மையாக பேசப்பட்டது.. இதுதொடர்பாக என்ஐஏ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளும் விசாரணை நடத்தின. வழக்கின் விசாரணை நடந்த காலகட்டத்தில், அரசு உயர் அதிகாரிகளுடனான ஸ்வப்னாவின் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
வழக்கு அரசியல் ரீதியாகவும் பெரும் புயலை கிளப்பியது.. அப்போதைய முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கர் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை மேலும் அதிகரித்தது. இதே வழக்கில் பி.எஸ். சரித்தின் பெயரும் இடம்பெற்றது. இதையடுத்து, இவர்கள் 2 பேரும் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களாக விசாரணையை எதிர்கொண்டனர்.
மணமகன் யார் தெரியுமா
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், நீண்ட காலம் ஜெயிலிலேயே இருந்தார். பிறகு 2021-ம் ஆண்டு நவம்பரில் கேரள ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இப்போது ஸ்வப்னா திருமணம் செய்து கொண்டுள்ளார்.. இதனால் மீடியாவில் கவனம் பெற்றுள்ளார்.. கொச்சி நெட்டூரில் உள்ள வடக்கே பட்டுப்புரைக்கல் கோயிலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மணமக்கள் இருவரும் ஏற்கெனவே கொச்சியில் ஒன்றாக வசித்து வந்தார்களாம்.
திருமணத்தில் ஸ்பெஷல் என்ன
இந்த திருமணத்தில் ஸ்பெஷல் என்ன தெரியுமா? முதல் விஷயம், ஸ்வப்னா வெளியிட்ட திருமண போட்டோதான்.. சோஷியல் மீடியாவில் தன்னுடைய கல்யாண போட்டோவை பதிவிட்ட ஸ்வப்னா, தனது கணவர் யார் என்பதை முதலில் வெளிப்படையாக சொல்லவில்லை. திருமணத்தைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டிருந்த நிலையில், மணமகன் யார் என்ற தகவல் பிறகுதான் வெளியானது. அந்த நபர் வேறு யாருமல்ல.. தங்கக் கடத்தல் வழக்கில் தன்னுடன் சேர்த்து குற்றச்சாட்டுக்குள்ளான பி.எஸ். சரித் என்பவர்தான்.
தங்கக் கடத்தல் வழக்கில் தன்னுடன் குற்றச்சாட்டுக்குள்ளான பி.எஸ். சரித்தையே திருமணம் செய்துகொண்டதால் இந்த திருமணம் இப்போது பேசுபொருளாகியுள்ளது…
ஸ்வப்னாவுக்கு இது 3-வது திருமணம்
அடுத்த ஸ்பெஷல்.. ஸ்வப்னாவுக்கு இது 3-வது திருமணம். அவரது முதல் திருமணம் 2000-ம் ஆண்டு கிருஷ்ணகுமார் என்பவருடன் நடைபெற்றதாகவும், அந்த திருமணம் 2008ல் முடிவுக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு 2011-ம் ஆண்டு ஜெயசங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணமும் பிறகு முடிவுக்கு வந்தது. சரித்துக்கு இது 2-வது திருமணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் மூன்றாவது சுவாரஸ்யம் என்ன தெரியுமா? மணமக்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பு இப்போது தொடங்கியது அல்ல. தங்கக் கடத்தல் வழக்கில் இருவரது பெயர்களும் ஒன்றாக அடிபட்ட காலத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிந்தவர்கள். இப்போது அதே வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான இருவரும் வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர்.
திருமணத்தை அறிவித்த ஸ்வப்னா, உண்மை, மரியாதை, மதிப்புகள் ஆகியவற்றுடன் குழந்தைகளுக்காக ஒரு குடும்பத்தை உருவாக்கவே இந்த முடிவை எடுத்ததாக எமோஷனலாக சொல்கிறார்.. வாழ்க்கையின் இறுதி வரை இந்த திருமண பந்தம் நீடிக்க தங்களை ஆசீர்வதிக்குமாறும் ஸ்வப்னா உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். இப்படி ஒரு பரபரப்பான வழக்கில் பல ஆண்டுகளாக பேசப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் வாழ்க்கையில், இப்போது ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது..!!!
