புதுடில்லி: இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டனும் வீர் சக்ரா விருது பெற்றவருமான அபிநந்தன் வர்தமான், இந்திய விமானப்படையிலிருந்து விலகி ஒரு தனியார் விமான நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
2019ம் ஆண்டு பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே வான்வழியில் மோதல் நடந்தது. பாகிஸ்தானின் F-16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார். இருப்பினும், இந்தச் செயல்பாட்டின் போது, பாகிஸ்தான் விமானங்களில் ஒன்று பலமுறை சுட்டதால், அவர் பாகிஸ்தான் பகுதிக்குள் செல்ல நேரிட்டது.
அவர் அந்த நாட்டில் மூன்று நாட்கள் சிறைபிடிக்கப்பட்டார். அவர் பாகிஸ்தானியப் படைகளுடன் துணிச்சலுடனும் மனவுறுதியுடனும் உறுதியைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார். இவ்விவகாரத்தில் ஏற்பட்ட சர்வதேசத் தலையீடு காரணமாக, பாகிஸ்தான் ராணுவம் அவரை விடுவிக்க நிர்பந்திக்கப்பட்டது. பிறகு அபிநந்தன் வர்தமானுக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தற்போது ‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், கோவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘பிளை91’ (FLY91) என்ற பிராந்திய தனியார் விமான நிறுவனத்தில் வணிகரீதியான விமானியாக இணைந்துள்ளார்
இந்திய விமானப்படையில் 22 ஆண்டுகள் பணியாற்றிய அவர், விருப்ப ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அவர் தற்போது பயணிகள் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கோவா – ஹைதராபாத் வழித்தடத்தில் அவருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அனைத்து பயிற்சிகளும் முடிந்தவுடன், அவர் இந்நிறுவனத்தின் ATR 72-600 ரக பயணிகள் விமானங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து FLY91 தனியார் விமான நிறுவன செய்தித் தொடர்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஒரு ரகசிய விஷயம்; அது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
