இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டனும், வீர சக்கர விருது பெற்றவருமான அபிநந்தன் வர்தமான், இந்திய விமானப்படையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தற்போது தனியார் விமான நிறுவனத்தில் வணிகரீதியான விமானியாக தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தின் போது, இந்திய விமானப்படையின் விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் வர்தமான் முக்கிய கவனம் பெற்றார்.
MiG-21 விமானத்தை இயக்கிய அபிநந்தன்
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலகோட் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப்படைகளுக்கு இடையே வான்வழி மோதல் ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தான் விமானப்படையின் F-16 போர் விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப்படையின் Mig -21 பைசன் விமானத்தை அபிநந்தன் இயக்கினார்.
இந்த மோதலின்போது அபிநந்தனின் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இதையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுமார் மூன்று நாட்களில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வீர் சக்ரா விருது.. குரூப் கேப்டனாக பதவி உயர்வு
போர்க்காலத்தில் வெளிப்படுத்திய வீரத்திற்காக அபிநந்தன் வர்தமானுக்கு இந்தியாவின் முக்கியமான போர் கால வீர விருதுகளில் ஒன்றான வீர் சக்ராவிருது வழங்கப்பட்டது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் குரூப் கேப்டன் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், இந்திய விமானப்படையில் இருந்து அவர் தற்போது விருப்பஓய்வுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
FLY91 நிறுவனத்தில் கமர்ஷியல் பைலட்
விமானப்படை பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அபிநந்தன் வர்தமான், இந்தியாவைச் சேர்ந்த பிராந்திய விமான நிறுவனமான FLY91-ல் வணிகரீதியான கமர்ஷியல் பைலட்டாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பயணிகள் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை அவர் மேற்கொண்டு வருவதாகவும், கோவா மற்றும் ஹைதராபாத் வழித்தடங்களில் பயிற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனன் VS உதயநிதி ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்..!
அபிநந்தன் தங்கள் நிறுவனத்தில் இணைந்திருப்பதை FLY91 நிறுவனமும் உறுதி செய்துள்ளது. எனினும், அவரது பணிச்சூழல் அல்லது தனிப்பட்ட தொழில்முறை பயணம் தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிட நிறுவனம் மறுத்துள்ளது.
ஏழு ஆண்டுகளாக தொடரும் அபிநந்தனின் மௌனம்
2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டது முதல், வீர சக்கரவிருது பெற்றது, குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றது என கடந்த ஏழு ஆண்டுகளில் அபிநந்தன் தனது அனுபவங்கள் குறித்து பொதுவெளியில் விரிவாக பேசியதில்லை.
தற்போதும் தனது புதிய தொழில் பயணம் குறித்தும் அவர் எந்தவொரு பொது கருத்தையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறார்.
இந்திய விமானப்படையில் குரூப் கேப்டனாக பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு, தற்போது பயணிகள் விமானத்தின் கமர்ஷியல் பைலட்டாக புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள அபிநந்தன் வர்தமானுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
