புதுடெல்லி,
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) அமல்படுத்தும் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தனர். ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் அந்த தீர்மானத்தை நிராகரித்தனர்.
தற்போது தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை அடுத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க கோரி மீண்டும் தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த குறைந்தது ஐந்து மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான புதிய அறிவிப்பை வரைவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த அறிவிப்பு எந்த அவையில் தாக்கல் செய்யப்படும் அல்லது கடந்த முறை செய்தது போல் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
