சென்னை: தவெக ஆட்சியில் கமிஷன் வாங்கவில்லை இனி அரசு கட்டணத்திலேயே ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என ஆம்னி பஸ் கூட்டமைப்பு கூறி 3 மாசம் கூட ஆகவில்லை அதற்குள் நிலமை தலைகீழாக மாறியுள்ளதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சாதாரண நாட்களில் ரூ.700 முதல் 1,000 வரை வசூலித்த பேருந்துகள் எல்லாம், இப்போது விடுமுறை நாட்களை சாதகமாக பயன்படுத்தி 2 ஆயிரம், 3 ஆயிரம் என வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களே இல்லை. இது குறித்து சொல்ல நினைத்தாலும் போக்குவரத்து அமைச்சரையே காணவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக களம் கண்ட அரசியல் கட்சியான தவெக வெற்றி பெற்றால், பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என நம்பி மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் மக்கள் அலை அலையாக சென்று வாக்களித்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக மக்கள் கூட, பல லட்சங்களை செலவு செய்து வாக்களித்துவிட்டு சென்றனர்.
வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தவெக அரசில் மாற்றம் ஏற்படும் என்று நினைத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்பது பல்வேறு இடங்களிலும் மக்கள் கூறும் கருத்தாக உள்ளது. குறிப்பாக ஆம்னி பஸ்களில் கடந்த ஆட்சி காலத்தில், விடுமுறை நாட்களில் கட்டணங்கள் அதிகரித்து வசூலிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. தவெக ஆட்சி அமைந்த பிறகு கமிஷன் வாங்குவது இல்லை என்றும், இனி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் பேருந்தை இயக்க தயாராக இருப்பதாகவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு கூறியது.
ஆனால், தற்போது விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ஆம்னி பஸ்களில் வசூலிக்கும் கட்டணத்தை பார்க்கும் போது, அன்று சொன்னதெல்லாம் வெறும் தண்ணீரில் எழுதிய கதைதான் போல என பயணிகள் நினைக்கும் அளவிற்கு நிலமை மாறியுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் பேருந்துகளில் 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சாதாரண நாட்களில் ரூ.700 முதல் 1,000 வரை வசூலித்த பேருந்துகள் எல்லாம், விடுமுறை நாட்களை சாதகமாக பயன்படுத்தி இரண்டாயிரம், மூவாயிரம் என வசூலித்தது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆம்னி பஸ்கள் இன்னும் ஒரு படி மெலே சென்று குறைவான கட்டணங்களில் முன்கூட்டியே புக் ஆகியிருந்தால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்வதாக கூறிவிட்டு, மீண்டும் அதே டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற கொடுமையும் நடந்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
இது ஒருபுறம் இருக்க கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் அந்த அபராதமும் பெயரளவுக்கு தான் என்றும் வெறும் கண் துடைப்புக்காக இந்த அபராத நடவடிக்கை என்றும் பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் விடிய விடிய பஸ் ஸ்டாண்டிலேயே அவதிப்பட்டனர். ஆனால், துறைக்கு பொறுப்பான அமைச்சர் பார்த்திபனோ அந்த பக்கமே செல்லவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இது குறித்து பயணிகள் கூறுகையில், கடந்த திமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டமாக இருந்தால் நேரடியாக வந்து கள ஆய்வு நடத்தினார்.
களத்திற்கு வந்து தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்குவது வழக்கம். ஆனால் தற்போது அமைச்சரையே பார்க்க முடியவில்லை’ என்று குற்றம் சாட்டினர். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கே பேருந்தை இயக்க தயாராகிவிட்டதாக கூறிவிட்டு, இப்படி கட்டணக் கொள்ளையில் ஆம்னி பேருந்துகள் ஈடுபடுகின்றன என்று சமூக வலைத்தளங்களிலும் பயணிகள் தங்கள் வேதனையை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.
