சென்னை,
பேட்டியில் கலந்து கொண்ட சமந்தா, குழந்தை வரவிருக்கும் நிலையில் தாய்மையை வரவேற்கவும், தனது வாழ்க்கையின் முற்றிலும் புதிய கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கவும் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் சமந்தா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக சமந்தா அறிவித்துள்ளார். குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் திரையுலகில் இணைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி
கர்ப்ப காலத்திலும் தனது உடல்நலத்தில் சமந்தா கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார். அதில், பல ஆண்டுகளாக தொடர்ந்து ஸ்ட்ரென்த் டிரெய்னிங் செய்து வருவதாகவும், தற்போது மருத்துவரின் முன் அனுமதியுடனும், கர்ப்ப காலப் பயிற்சிகளில் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடனும் மட்டுமே உடற்பயிற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும் உடலமைப்பும் மாறுபடும் என்பதால், முறையான பயிற்சியாளர் மற்றும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தனது உடற்பயிற்சிகளை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் சமந்தா அறிவுறுத்தியிருந்தார்.
‘வாழ்க்கை முற்றிலும் மாற தயாராக இருக்கிறேன்’
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது எதிர்கால வாழ்க்கை குறித்து பேசிய சமந்தா, “என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தையை அன்புடன் அழைக்கும் பெயரையும் குறிப்பிட்ட அவர், குழந்தை வரவிருக்கும் நிலையில் தாய்மையை வரவேற்கவும், தனது வாழ்க்கையின் முற்றிலும் புதிய கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கவும் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
