மிசா அடக்குமுறை சம்பந்தமான விவாதங்கள் தமிழ்நாடு அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் மிசா குறித்து கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, அமைச்சர் நிர்மல் குமாரும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என பேசியிருந்தார். இந்நிலையில் மிசா சம்பந்தமான வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.
இதனை விமர்சனம் செய்யும் விதமாக தவெக ஐடி விங் பதிவிட்ட நிலையில், அதற்கு திமுக ஐடி விங் தரப்பில் இருந்து கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மிசா தொடர்பான வராலற்று ஆதாரங்களையும் பகிர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளது. முன்னதாக காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கும் போது முதல்வர் ஜோசப் விஜய் காட்டிய சைகை சர்ச்சைகளை கிளப்பியது.
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் தாக்கப்பட்டதை கேலி செய்யும் விதமாக முதல்வரின் சைகை அமைந்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவு சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.
அதில், எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது என காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. அதோடு ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்துடன் எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது இல்லை. அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் எனவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
