மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து விநியோகம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவின் மொத்த எல்பிஜி இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. போருக்கு முன்பு இதன் பங்கு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது.
சரக்குச் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் தரவுகளின்படி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மேற்கு ஆசியாவில் போரைத் தூண்டின. இது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தை முடக்கியது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எல்என்ஜி (LNG) விநியோகத்தில் 20 சதவீத அளவு இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.
இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி யில் சுமார் 90 சதவீத அளவு இந்த வழித்தடத்தின் மூலமே நடைபெறுவதால் நாட்டின் மொத்த எல்பிஜி நுகர்வில் 54 சதவீதம் இதனால் பாதிக்கப்பட்டது. இந்த விநியோகப் பற்றாக்குறையால் இந்தியாவின் மொத்த எல்பிஜி இறக்குமதி மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 43.1 சதவீதம் சரிந்து 7.14 மில்லியன் டன்னாகக் குறைந்தது. இதற்கு முந்தைய ஆறு மாதங்களில் இது 12.5 மில்லியன் டன்னாக இருந்தது.
போருக்கு முன்னர் இந்தியாவின் மிகப்பெரிய எல்பிஜி விநியோக நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இருந்தது. ஆனால் கடந்த ஆறு மாதங்களில் அங்கிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 79.8 சதவீதம் சரிந்து 0.958 மில்லியன் டன்னாகக் குறைந்தது. இதன் விளைவாக, இந்தியாவின் மொத்த இறக்குமதியில் அதன் பங்கு 37.8 சதவீதத்தில் இருந்து 13.4 சதவீதமாகக் குறைந்தது. அதேபோல, கத்தாரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 84.7 சதவீதம் சரிந்து 0.405 மில்லியன் டன்னாகக் குறைந்தது, மேலும் அதன் பங்கு 21.1 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைந்தது.
குவைத்தின் பங்கும் 15.1 சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாகவும், சவுதி அரேபியாவின் பங்கு 14.1 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாகவும் சரிந்தன. வளைகுடா நாடுகளிலிருந்து ஏற்பட்ட இந்த இறக்குமதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை அதிகரித்தது. இதனால் அமெரிக்காவின் பங்களிப்பு 281.1 சதவீதம் அதிகரித்து 3.78 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
எல்பிஜி விநியோகத்தில் ஏற்பட்ட இந்தச் சரிவு காரணமாக நம் நாட்டின் 33 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வணிக மற்றும் தொழில்முறை நுகர்வோருக்கான விநியோகத்தை அரசு குறைக்க வேண்டியிருந்தது. இதனுடன், உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களில் எல்பிஜி உற்பத்தியை அதிகபட்ச நிலைக்கு உயர்த்தியதுடன் சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையிலான குறைந்தபட்ச கால இடைவெளியும் அதிகரிக்கப்பட்டது.
இருப்பினும், உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவிலிருந்து விநியோகம் தொடங்கியதைத் தொடர்ந்து சில அவசரக்கால நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தினசரி நுகர்வு 90 ஆயிரம் டன்களிலிருந்து சுமார் 80 ஆயிரம் டன்களாகக் குறைந்துள்ளது. மேற்கு ஆசியாவிலிருந்து விநியோகம் சீராகும் வரை அமெரிக்காவிலிருந்து எல்பிஜி வரத்து தொடரும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
அடுத்த ஆண்டுக்கான மொத்த எல்பிஜி இறக்குமதியில் குறைந்தது 15 சதவீதத்தையாவது அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் மூலம் பெற வேண்டும் என்று இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளன. இது இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தை பல்வகைப்படுத்த உதவுவதுடன், அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
