திருச்சி: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் திருமங்கலம் ஃபார்முலாவை திமுக பின்பற்றாமல் இருக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லியிருக்கிறார் தெரியுமா?
திருச்சி அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “த.வெ.க குதிரை பேரம் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள். அதனால் தான் தற்பொழுது மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் வந்துள்ளது. நிச்சயம் மக்கள் அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள்.
சட்டசபைத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் மக்கள் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள குதிரை பேரம் மூலமாக அவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
அதனால் தான் இடைத்தேர்தல் வந்துள்ளது அதிமுக சார்பில் வெற்றி பெற்று ராஜினாமா செய்தவர்களையே த.வெ.க வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. மக்கள் நிச்சயம் அவர்களை தோற்கடித்து அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள்.
தமிழகத்தில் 10 லட்சம் கோடி கடன் உள்ளது புதிய திட்டங்கள் அறிவிப்பதில் சிக்கல் உள்ளது என த.வெ.க அரசு கூறியது ஆனால் தற்போது புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
தேர்வு செய்த இடம் சரியில்லாத இடம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி, குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவசர கதியில் அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. நிதி நிலை சீரான பின் சரியான இடத்தை தேர்வு செய்து தலைமை செயலகம் கட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் திறமையற்றவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் நான் பதில் அளிக்கும் போது யாரும் ஓடிவிடக் கூடாது என கூறி விட்டு முதல்வர் ஓடி விட்டார்.
நாங்கள் வைத்த கேள்விகளுக்கு எந்த பதிலும் முதலமைச்சரிடம் இருந்து வரவில்லை. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறினார்கள். ஆனால் அது தொடர்பான புகைப்படம் எதுவும் இதுவரை வரவில்லை. வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளது.
த.வெ.க ஆட்சியை மோசமான ஆட்சியாக தான் பார்க்கிறோம். மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் மக்களுக்கு துன்பம் தான் உள்ளது. இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை திமுக பின்பற்றும் என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார் என்கிற கேள்விக்கு, “அவர் அந்த பார்முலாவை முதலில் பின்பற்றாமல் இருக்கட்டும்” என பதில் அளித்தார்.
திமுகவை எதிரி கட்சி என கூறி வரும் அதிமுக, தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அக்கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறது. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்ட போது இபிஎஸ் அவருக்காக குரல் கொடுத்தார்.
சட்டசபையில் எதிர்க்கட்சிகளை ஓடக் கூடாது, என சொல்லிவிட்டு முதல்வரே ஓடிவிட்டார் என்றும் திருமங்கலம் பார்முலா குறித்து விமர்சனம் வைத்த நிர்மல் குமார் மீதே விமர்சனத்தை எடப்பாடி பழனிசாமி முன் வைத்துள்ளது திமுகவுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
