திருமணத்திற்கு முன்பே திரையில் தம்பதி ஆன சூர்யா

எழுதியவர்: யஷஸ்வினி ஸ்ரீ

20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நாளடைவில் உண்மையான காதலாக மாறும் கதையைக் கொண்ட ஒரு தமிழ் காதல் திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 11 அன்று, அந்தத் திரைப்படத்தில் திருமணமான தம்பதியாக நடித்த சூர்யா மற்றும் ஜோதிகா, நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

அந்தத் திரைப்படம்தான் சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, இரண்டு தசாப்தங்களாக நீடித்த திருமண வாழ்க்கை, 2 குழந்தைகள் மற்றும் தமிழ் சினிமாவின் போக்கையே வடிவமைத்த இணைந்த திரைப்பயணம் ஆகியவை உருவாகின. வணிக ரீதியான எந்தக் கணக்கீட்டுக்கும் அப்பாற்பட்டு உருவான இந்தத் திரைப்படமும் அதே அளவு நீண்ட காலம் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கிறது.

‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் எதைப் பற்றியது?

சில்லுனு ஒரு காதல், படத்தை என்.கிருஷ்ணா இயக்கினார். சூர்யா கவுதம் கதாபாத்திரத்திலும், ஜோதிகா குந்தவை கதாபாத்திரத்திலும், பூமிகா சாவ்லா ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் நடித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்ற சிறிய நகரில், கவுதமும் குந்தவியும் பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவருக்குமே அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மும்பையில் தங்களது இளம் மகளுடன் வசித்து வருகின்றனர். இப்போது இருவரும் ஆழமாகக் காதலிக்கும் தம்பதியாக இருக்கின்றனர். ஒரு நாள், குந்தவையின் கையில் கவுதமின் பழைய கல்லூரி நாட்குறிப்பு கிடைக்கிறது. அதைப் படிக்கும் போது, அவரது கடந்தகால காதல் வாழ்க்கை மற்றும் ஐஸ்வர்யாவுடனான உறவு குறித்து அவள் தெரிந்து கொள்கிறாள். ஆனால், குந்தவி கவுதமிடம் இதுகுறித்து நேரடியாகக் கேள்வி கேட்பதில்லை. 

மாறாக, கவுதம் தனது முதல் காதலான ஐஸ்வர்யாவுடன்தான் இருக்க விரும்புவார் என்று நினைத்து, அவர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கும் வகையில் அமைதியாக ஏற்பாடு செய்கிறாள்.

தலைப்பு மாற்றமும், கதாபாத்திரத் தேர்வும்

இந்தத் திரைப்படத்திற்கு முதலில் ஜில்லுனு ஒரு காதல் என்று பெயரிடப்பட்டிருந்தது. பின்னர், தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தும் நோக்கில் சில்லுனு ஒரு காதல்’ எனத் தலைப்பு மாற்றப்பட்டது. சுவாரஸ்யமாக, இப்படத்தின் கதாநாயகனாக முதலில் விஜய் தேர்வு செய்யப்பட்டிருந்தார். பின்னர் அந்தக் கதாபாத்திரம் சூர்யாவிடம் சென்றது. இந்த மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தக் கதாபாத்திர மாற்றம் திரைப்படத்தின் வெற்றியில் முக்கியமானதாக அமைந்தது.

சூர்யாவும் ஜோதிகாவும் திரையில் கணவன்-மனைவியாக நடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், அவர்களது நிஜ வாழ்க்கைத் திருமணம்  சில நாட்களில் நடைபெறவிருந்தது. இதனால், வேறு எந்த நடிகர்-நடிகை இணைந்து நடித்து உருவாக்க முடியாத ஒரு தனித்துவமான உணர்ச்சிப் பிணைப்பு இப்படத்திற்கு கிடைத்தது.

பூமிகா சாவ்லாவின் கதாபாத்திரத் தேர்வு

ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், இயக்குநர் என். கிருஷ்ணா முதலில் குந்தவை என்ற மனைவி கதாபாத்திரத்தைத் தனக்கு வழங்கியதாக பூமிகா சாவ்லா தெரிவித்தார். அந்தக் கதாபாத்திரத்தை இறுதியில் ஜோதிகா ஏற்று நடித்தார். ஆனால், பூமிகா அந்தக் கதாபாத்திரத்தை நிராகரித்துவிட்டு, அதற்குப் பதிலாக கல்லூரிக் காதலியான ஐஸ்வர்யா கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தார்.

திரைப்படத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரம் இரண்டு விதமான பரிமாணங்களைக் கொண்டிருந்ததாகவும், ஒரு நடிகையாக தனக்கு மிகவும் சவாலானதாக இருந்ததாகவும் அவர் கூறினார். “நான் நடித்த கதாபாத்திரம் இரண்டு விதமான பரிமாணங்களைக் கொண்டிருந்தது. அது மிகவும் சவாலானதாக இருந்தது. அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தேன். மேலும், அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காகவே நான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என பூமிகா தெரிவித்தார்.

அசினுக்கு முதலில் வழங்கப்பட்ட கதாபாத்திரம்

பூமிகா சாவ்லா ஒப்புக்கொள்வதற்கு முன்பு, ஐஸ்வர்யா கதாபாத்திரம் அசினுக்கு வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், சூர்யாவுடன் நடித்த கஜினி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அசின் இருந்தார். ஆனால், இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு போதுமான வாய்ப்பு இல்லை என்று கருதியதால், அசின் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. அவரை சம்மதிக்க வைப்பதற்காக, திரைப்படத்தில் மூன்று பாடல்களையும் வழங்குவதாக இயக்குநர் கூறியதாகவும், அதையும் அசின் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஜ வாழ்க்கைக் காதல் கதை

சூர்யாவும் ஜோதிகாவும் முதன்முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தனர். அந்தப் படத்தை வசந்த் இயக்கினார். அது ஜோதிகா நடித்த ஆரம்பகால தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். மும்பையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருந்த ஜோதிகா, அப்போது தமிழ் மொழியுடன் இன்னும் போராடிக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் தமிழ் வசனங்களைப் பேசுவதில் ஜோதிகாவுக்கு சூர்யா உதவினார். இதன் மூலம் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு உருவானது.

இந்த நட்பைக் காதலாக மாற்றியது ‘பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் அல்ல. அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ‘நந்தா’ திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்ட ஜோதிகாதான், ‘காக்க காக்க’ திரைப்படத்திற்காக சூர்யாவின் பெயரை கவுதம் வாசுதேவ் மேனனிடம் பரிந்துரைத்திருந்தார். ‘காக்க காக்க’ படப்பிடிப்பின்போது, சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்கத் தொடங்கினர்.

பின்னர், அவர்களது உறவில் திருமணம் குறித்த பேச்சும் எழுந்தது. ஆனால், திருமணத்தை நோக்கிய அவர்களது பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமார், ஆரம்பத்தில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த எதிர்ப்புக்குக் காரணம் இரு குடும்பங்களுக்கும் இடையிலான கலாசார வேறுபாடுகளாகும். சதானா என்ற இயற்பெயரைக் கொண்ட ஜோதிகா, மும்பையைச் சேர்ந்த பஞ்சாபி மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர். அதேவேளையில், சிவகுமார் குடும்பம் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய குடும்பமாகும்.

இரு குடும்பங்களின் பின்னணியில் இருந்த இந்த வேறுபாடு, திருமணம் குறித்து சிவகுமாரை ஆரம்பத்தில் தயங்க வைத்தது. ஆனால், சூர்யா தனது முடிவில் உறுதியாக இருந்தார். கலாட்டாவுக்கு அளித்த பேட்டியில், தனது மகனின் உறுதியைப் பற்றி சிவகுமார் நினைவுகூர்ந்தார். ஆரம்பத்தில், அவனுடைய காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவன் மிகவும் உறுதியாக இருந்தான். அவளுடன் மட்டுமே வாழ்வேன்; இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே இருப்பேன் என்று கூறினான்.”

இந்த உறுதியான முடிவு, அந்த மூத்த நடிகரை தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்தது. அப்போது, என் திரையுலக வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தேன். நான் சுமார் 150 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பெரும்பாலான படங்கள் காதல் திருமணத்தை மையமாகக் கொண்டவையாக இருந்தன. எனவே, இறுதியில் நான் சம்மதித்தேன் என்று சிவகுமார் தெரிவித்தார்.

2006 – நிஜ வாழ்க்கையில் இணைந்த சூர்யா – ஜோதிகா

2006 செப்டம்பர் 8 அன்று ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 11, 2006 அன்று, சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்து கொண்டனர். திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் இரு குடும்பத்தினரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். அப்போது, சிவகுமாரும் இந்தத் திருமணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

பின்னர், இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மகள் தியா – 2007ஆம் ஆண்டு பிறந்தார். மகன் தேவ் – 2010ஆம் ஆண்டு பிறந்தார். 
திரையில் கணவன் – மனைவி; நிஜ வாழ்க்கையிலும் கணவன் – மனைவி
இந்தத் திரைப்படத்தின் நடிகர் தேர்வு, எந்தத் திரைக்கதையாலும் செயற்கையாக உருவாக்க முடியாத ஒரு தனித்துவமான உணர்வை ஏற்படுத்தியது.‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் திருமணக் காட்சியை சூர்யாவும் ஜோதிகாவும் படமாக்கியபோது, அவர்கள் இன்னும் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. திரைப்படத்தில், பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையான காதலாக மாறும் தம்பதியாக அவர்கள் நடித்தனர்.

அதே நேரத்தில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படப் படப்பிடிப்புத் தளத்தில் தொடங்கிய அவர்களது சொந்த காதல் உறவும் திருமணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. திரைப்படத்தின் மும்பை பகுதிகளில் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையிலான காட்சிகள், திரைக்கதை வழங்கியதைத் தாண்டிய ஒரு இயல்பான அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.  அவர்களது குடும்ப வாழ்க்கைக் காட்சிகள், ஒன்றாக உணவருந்துவது, சிறிய சண்டைகள், சூர்யா வேலைக்குச் செல்லும்போது ஜோதிகா அவரது சட்டைக் காலரைச் சரிசெய்வது, தங்களது மகளுடன் ஜோதிகா விளையாடுவதை சூர்யா ரசித்துப் பார்ப்பது போன்ற காட்சிகள் அனைத்தும் நடித்ததைப் போல இல்லாமல், உண்மையான குடும்ப வாழ்க்கையைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகின்றன.

அவர்கள் ஒருவரையொருவர் ஆழமாக அறிந்தவர்கள். ஒருவரின் இருப்பிலும் மற்றொருவர் இயல்பாகவும் வசதியாகவும் இருப்பவர்கள். அவர்களுக்கிடையேயான நெருக்கத்தை நடிப்பின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அந்த நெருக்கம் ஏற்கனவே அவர்களுக்குள் இருந்தது.

செப்டம்பர் 8 மற்றும் செப்டம்பர் 11 – திட்டமிடப்படாத அழகான தற்செயல்

சூர்யா – ஜோதிகா காதல் கதையை அழகாக்கும் முக்கியமான விஷயம், 2006 செப்டம்பர் 8 மற்றும் செப்டம்பர் 11 ஆகிய தேதிகளுக்கு இடையிலான அந்த மூன்று நாட்கள் திட்டமிட்டு அமைக்கப்படவில்லை என்பதுதான். திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர் முடிவு செய்திருந்தார். திருமணத் தேதியை இரு குடும்பங்களும் முடிவு செய்திருந்தனர். அந்த மூன்று நாட்கள் இடைவெளி என்பது வெறும் தற்செயல் மட்டுமே. ஆனால், அந்தத் தற்செயல் திரைப்படத்திற்கு எந்தவொரு விளம்பரப் பட்ஜெட்டாலும் உருவாக்க முடியாத ஒரு விஷயத்தை வழங்கியது.

திரையில் நடித்த காதலுக்கு, திரைக்கு வெளியே நிஜமான ஒரு முடிவு கிடைத்தது. திரையரங்கில் அந்தக் காதலைப் பார்த்த ரசிகர்கள், அதே கதையின் நாயகன் – நாயகி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டதை மூன்று நாட்களுக்குப் பிறகு கண்டனர். அதனால், சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் ஒரு சாதாரண காதல் கதையாக மட்டுமல்லாமல், சூர்யா – ஜோதிகாவின் நிஜ வாழ்க்கைக் காதலுடனும் இணைந்த ஒரு நினைவுச் சின்னமாகவும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது.

Source link