சென்னை: கூட்டணியின் பெயரில் “மதச்சார்பற்ற” என்ற சொல்லைத் திருமாவளவன்தான் சேர்க்க வலியுறுத்தினார். ஆனால் முதல்வர், நிதியமைச்சர், சபாநாயகர் ஆகியோரின் செயல்பாடுகளை பார்த்தால் விஜய்க்கு இதில் பெரிய விருப்பம் இருக்காது. காரணம், மதச்சார்பற்ற என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது பாஜகவை எதிர்ப்பதாக அமைந்துவிடும். விஜய்யின் அரசியலும் ஆட்சியும் நேர்த்தியாக செயல்படவில்லை, அது மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஆட்சியாகவே உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், “சட்டமன்றத்தில் முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு போக்கிரித்தனமான செயல்… தமிழ்நாட்டின் சட்டமன்ற பெருமைக்குரிய இடத்தில் என்ன பேச வேண்டும் என்ற எந்தவிதமான தெளிவும் இல்லாமல் தவறான தகவல்களையும் அவதூறுகளையும் அவர் பரப்பியுள்ளார். எமர்ஜென்சி காலத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அவருக்கு ஏதாவது தெரியுமா என்றே தெரியவில்லை.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோர் யாருடைய தூண்டுதலின் பேரில், யார் எழுதி கொடுத்ததை வைத்துப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.
முதலமைச்சர் பொறுப்பு
ஒரு முதலமைச்சராக இருப்பவர் பொறுப்பை உணராமல் தொடர்ந்து அவதூறான கருத்துக்களைப் பேசி வருகிறார். ஆதாரமில்லாமல் இதுபோன்ற அவதூறுகளைப் பேசியபோதே சட்டமன்ற சபாநாயகர் அதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்யாமல் அடுத்த நாள் தான் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தினார். வழக்கு விசாரணைக்கே வராத சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்துக் கூடத் தவறான தகவல்களையே சட்டமன்றத்தில் பேசியுள்ளனர்.
மு.க. ஸ்டாலின் மிசாவின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், திருட்டு மற்றும் பிக்பாக்கெட் வழக்கில் கைதானவர்களோடு ஒப்பிட்டும் தவறான அவதூறுகளைப் பரப்புகிறார்கள். ஆனால், 1976ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி கூடுதல் காவல்துறை தலைவர் மற்றும் கமிஷனர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ கைது உத்தரவு நகலே அதற்குத் தெளிவான சான்றாகும்.
23 வயது ஸ்டாலின்
அந்த அறிக்கையில், அப்போதைய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான 23 வயது நிரம்பிய மு.க. ஸ்டாலின், எமர்ஜென்சி மற்றும் மத்திய அரசுக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களில் பேசி மக்களைத் தூண்டியதாகவும், மாநில உரிமைகளுக்காகவும் தேச ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டதால், 1971ம் ஆண்டின் உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் (MISA Act) பிரிவு 3(1)(a)(ii) மற்றும் 3(1)-ன் கீழ் கைது செய்யப்படுவதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரா. செழியன் எழுதிய புத்தகத்தைச் சுட்டிக்காட்டி தவறாக வாதிடுகிறார்கள். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டவுடன் இரா. செழியன் தமிழ்நாடு வந்து அன்றைய முதல்வர் கலைஞரை சந்தித்ததையும், அதை எதிர்த்துப் போராட கலைஞர் உறுதியாக இருந்ததையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஷா கமிஷன் அறிக்கையில் பெயர் இல்லை என்பதற்காகவே அவர் கைது செய்யப்படவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறானது.
தவெக – பாஜக
தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவானாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் சேரத் தயங்குவதற்கு முக்கியக் காரணம் உள்ளது. விஜய் அரசின் சில செயல்பாடுகள் அப்படியே பாஜகவின் கொள்கைகளை ஒத்திருக்கின்றன.
குறிப்பாக, பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான நில அளவை 100 ஏக்கரில் இருந்து 12 ஏக்கராகக் குறைத்து சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தகுதியில்லாத தனியார் நிறுவனங்கள் எளிதில் பல்கலைக்கழகங்களைத் தொடங்க வழிவகுக்கும் ஒரு தனியார்மயமாக்கல் கொள்கையாகும். பாஜகவின் ஆதரவோடு எடுக்கப்படும் இதுபோன்ற முடிவுகளால் தான் கம்யூனிஸ்டுகள் இந்த ஆட்சியில் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பார்களே தவிர, கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வரமாட்டார்கள்.
திருமாவளவனின் அரசியல் நகர்வுகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழகத்தின் சமூக இணக்கப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பெரிதும் பங்காற்றியவர்… தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத சூழலில், இவர்களின் ஆதரவு இல்லையென்றால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும், அதாவது பாஜகவின் மறைமுக ஆட்சி வந்துவிடும் என்ற அரசியல் சூழ்நிலை காரணமாகவே அவர் அவசர அவசரமாக இந்த அரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தார். வன்னிய அரசு போன்றவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவது தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் விஷயம் தான்.
கூட்டணியின் பெயரில் “மதச்சார்பற்ற” என்ற சொல்லைத் திருமாவளவன்தான் சேர்க்க வலியுறுத்தினார். ஆனால் முதல்வர், நிதியமைச்சர், சபாநாயகர் ஆகியோரின் செயல்பாடுகளை பார்த்தால் விஜய்க்கு இதில் பெரிய விருப்பம் இருக்காது. காரணம், மதச்சார்பற்ற என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது பாஜகவை எதிர்ப்பதாக அமைந்துவிடும். விஜய்யின் அரசியலும் ஆட்சியும் நேர்த்தியாக செயல்படவில்லை, அது மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஆட்சியாகவே உள்ளது.
முதலமைச்சர் சர்ச், நிதி அமைச்சர் சர்ச்,
முதலமைச்சர் சர்ச், நிதி அமைச்சர் சர்ச், சபாநாயகர் சர்ச்… எல்லாரும் சர்ச் வேலையாத்தான் இருக்காங்க, சர்ச் ஆட்களாத்தான் வெளிய தெரியுறாங்க.. இதன் மூலம், அவர்கள் குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட அமைப்பின் பின்னணியிலோ அல்லது அதற்குச் சாதகமாகவோ செயல்படுவது போல் வெளியில் தோற்றமளிக்கிறது.. அதனால் அவர்களால் வெளிப்படையாக “மதச்சார்பற்ற” என்ற நிலையை எடுக்க இயலவில்லை..
“திமுகவுக்குக் கூட்டணியைக் கையாளும் ஆற்றல் இல்லை” என்று திருமாவளவன் பேசியது அரசியல் ரீதியாக ஏற்பட்ட பிளவை வெளிப்படுத்துகிறதே தவிர தவறான கருத்து அல்ல. திமுக தங்களுக்கு குறைந்தபட்சம் 8 தொகுதிகளாவது அளித்திருக்க வேண்டும் என எதிர்பார்த்ததே திருமாவளவனின் இந்த அதிருப்திக்கு காரணமாகும்.
டெபாசிட் வாங்குவது கஷ்டம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சி மாறிய நபர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதை அதிமுக வாக்காளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு மட்டுமே விஜய்க்கு ஓரளவுக்குப் பலமாக இருக்கும்.
அதே சமயம், விஜய் சார்பில் போட்டியிடும் அதிமுக பின்னணி கொண்ட வேட்பாளர்கள் மக்களிடம் சாதகமான செல்வாக்கை பெறவில்லை என்பதால், அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, டெபாசிட் பெறுவதே கடினம்.
இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று பரவிய வதந்திகளில் உண்மை இல்லை. தவெகவை விட திமுக பன்மடங்கு பெரிய மற்றும் பலமான கட்சி. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, தவெகவின் வளர்ச்சியைத் தடுக்கவும், களத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்கவும் நிச்சயம் இடைத்தேர்தலில் போட்டியிடும்” என்றெல்லாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
