சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேந்தர் வெளியிட்ட உத்தரவில், “தமிழ்நாட்டில் உள்ள கடைகளுக்கு வருகின்ற நவம்பர் 1-ம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும். கடைகளின் பெயர்ப் பலகையை தமிழில் மாற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு, தமிழில் பெயர் பலகைகளை மாற்ற தயார் எனவும், அதற்கு குறைந்தபட்சம் 3 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் இந்திய சில்லறை வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து கடைகளின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்ற, இன்றிலிருந்து வருகின்ற நவம்பர் 1-ம் தேதி வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டார் நீதிபதி சுரேந்தர்.
கிட்டத்தட்ட 2 மாதம் கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், கடை உரிமையாளர்கள் விரைந்து பெயர்ப் பலகைகளை மாற்றி விடுவது நல்லது.
கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் பெரியதாகவும், முதன்மையாகவும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தமிழக அரசு வெளியிட்ட அளவுகளின் படி 5/8 அளவு தமிழ் எழுத்துக்களுக்கு இடமளிக்க வேண்டும் எனவும், 2/8 அளவு ஆங்கிலத்திற்கு இடம் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. விருப்பப்பட்டால் 1/8 அளவு பிற மொழிகளைப் பயன்படுத்தலாம்.
இந்த வழக்கில் தற்போது உயர்நீதிமன்றமே காலக்கெடுவை நிர்ணயித்திருக்கும் நிலையில், இதனை மீறுவோர் மீது தொழிலாளர் நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ஆய்வு நடத்தி, சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
