நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் போட்டியாளர்! 'பிக்பாஸ் தி காமன் மேன்' எதற்கு தெரியுமா?

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10 அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவிருக்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேடும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள், விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீசனில் புது முயற்சியாக ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ என்கிற பெயரில் முன் கூட்டியே ஓர் விஷயத்தைச் செய்ய இருக்கின்றனர்.

இது குறித்த புரொமொ தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் சாதாரண நபர்களும் கலந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்கிறார்கள்.

Bigg Boss House

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் எவ‌ரும் தங்களைப் பற்றிய விபரத்துடன் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவதற்கான காரணத்தையும் வீடியோவாக அனுப்பி வைக்க வேண்டுமாம. தேர்வாகிறவர்கள் பிக்பாஸ் சீசன் 10 ல் ஒரு போட்டியாளராக களமிறங்க இருக்கிறார்கள்.

இது குறித்து நிகழ்ச்சியுடன் தொடர்புடைய சிலரிடம் பேசினோம்.

”சினிமா, டிவி பிரபலங்கள் மட்டுமில்லாம சாதாரணமான நபர்கள் முன்னாடி கூட கலந்திருக்காங்கதான். முதல் சீசனில் டைட்டில் வென்ற ஆரவ் கூட அந்த நிகழ்ச்சிக்கு முன் அவ்வளவா அறியப்படாதவர்தான். ஆனாலும் அடுத்தடுத்த சீசன்களில் போட்டியாளர்களாக சினிமா, டிவி, நட்சத்திரங்களே அதிகளவில் கலந்துகிடறதா ஒரு கருத்து ஆடியன்ஸ் மத்தியில கேக்க ஆரம்பிச்சது. ஒருகட்டத்துல அது ஒருவிதமான சலிப்பையும் உண்டாக்குச்சுனு சொல்லலாம்.

அதுலயும் டிவி நட்சத்திரங்கள்னா விஜய் டிவி சீரியலகளில் நடிக்கிறவங்களே அதிகம் பங்கெடுத்தாங்க. சோஷியல் மீடியாவுல இது ட்ரோல் மெட்டீரியலாச்சு.

கடந்த சீசனில் சமூக ஊடக பிரபலங்களை இறக்கிப் பார்த்தாங்க. அதுவும் எதிர்பார்த்த வெற்றியை தரலனு சொல்லனும்.

ஒவ்வொரு வருஷமும் கமர்ஷியலா ஹிட் ஆகிற ஷோ. அந்த ஹிட்டுக்கு காரணமான ஆடியன்ஸ் தரப்புல அதாவது நிகழ்ச்சியைப் பார்க்கிற சாதாரண பார்வையாளர்கள் தரப்புல இருந்தும் போட்டியாளர்களை அனுமதிச்சா அது நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை உண்டாக்கும்னு நினைக்கிறாங்க. அதனால இந்த வருஷம் இந்த முயற்சியை தொடங்கியிருக்காங்க” என்கிறார்கள் அவர்கள்.

Source link