சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற இந்த அரசின் அறிவிப்பை எதிர்த்து மீனவ கிராம மக்கள் அவசரக் கூட்டம் கூட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இடத்தில் மிகப்பெரிய அரசுக் கட்டடம் அமைவதால் அனைத்துத் தரப்பு மக்களுக்குமே பாதிப்பு ஏற்படும்! புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள பகுதியில் ஏறக்குறைய 30000 மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் பயில்கிறார்கள். குறுகலான சாலை வசதிகள் உள்ள இடம் என்பதால் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு உள்ளதா? அவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் செல்வார்களா? என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் மேலும் கூறுகையில், “அரசுத் தகவலின் அடிப்படையில் இன்னும் 40 ஆண்டுகளுக்குள் அப்பகுதியில் கடல் நீர் சூழும் அபாயம் உள்ளது. இந்த வகையில் பார்த்தால் 50 ஆண்டுகளுக்குக் கூட இக்கட்டிடம் நிலைக்காது என்கிறார்கள் சூழலியல் வல்லுநர்கள். மீனவர்கள் பூர்வீகமாக வாழும் பகுதி! அவர்கள் படகுகளை நிறுத்த, மீன்களை உலர்த்த எவ்விதமான தடைகளும் வராது என அரசு உறுதி அளிக்குமா?
2004ஆம் ஆண்டு சுனாமி வந்த இடம்.
oastal Regulation Zone(CRZ) கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் Zone 2க்குள் இப்பகுதி வருகிறது. இங்கே 20000 சதுர அடியில் கட்டிடம் கட்டுவதே ஆபத்தானது.
கஜானா காலி என்று சொல்லிவிட்டு இவ்வளவு கோடியில் இது தேவையா? அதுவும் விஜய் வீடு அருகில்! அவருக்காக கட்டுகிறாரா?
தலைமைச் செயலகத்துக்காகவே கட்டப்பட்ட கட்டடத்தின் இன்றைய நிலை என்ன?
ஓமந்தூரார் மருத்துவமனையில் எத்தனை மாடிகள் பயன்பாட்டில் உள்ளது?
பயன்பாட்டில் இல்லாத பகுதிகள் சுகாதாரமாக பாதுகாக்கப்படுகின்றனவா? சில ஆண்டுகளுக்கு முன்னர் அது பாம்பு போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாக மாறி இருந்தது. பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தி நோயாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
பெரும்பாலான இடம் அங்கே பயன்பாடில்லாமல் இருக்கிறது. அவ்விடத்தை தலைமைச் செயலகமாக பயன்படுத்த வேண்டும். மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும். மிக முக்கியமாக பட்டினப்பாக்கத்திற்கு மாறாக வேறு இடத்தை, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் தேர்வு செய்ய வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்து அந்த பதிவிலேயே பதில் அளித்துள்ள தவெக ஆதரவாளரின் பதிவினையும் பார்ப்போம், அன்பில் மகேஷ் அவர்களே, உங்கள் பதிவைப் பார்த்தேன். ஒவ்வொரு புள்ளியாக பதில் சொல்கிறேன் உங்கள் அரசு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமையும் என்ற அறிவிப்பை எதிர்த்து மீனவர்கள் கூட்டம் கூட்டியதாகச் சொல்கிறீர்கள். மீனவர்களின் வாழ்வாதாரம் முக்கியம். ஆனால் உங்கள் ஆட்சியில் கடற்கரை ஒழுங்குமுறை மீறல்கள், மீனவர்கள் இடம்பெயர்வு, படகுகள் நிறுத்த இடமில்லாமல் போனது எத்தனை முறை நடந்தது? அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
30,000 மாணவர்கள், குறுகிய சாலைகள் என்கிறீர்கள். சரி. உங்கள் காலத்தில் சென்னையில் பள்ளிகள் அருகில் எத்தனை புதிய அரசுக் கட்டிடங்கள், சாலை விரிவாக்கங்கள் செய்யப்பட்டன? மாணவர்கள் பாதுகாப்பாகப் போக வழி செய்தீர்களா அல்லது பேச்சு மட்டும்தானா?
கடல் நீர் 40 ஆண்டுகளில் சூழும், 50 ஆண்டுகளுக்குக் கட்டிடம் நிலைக்காது என்கிறீர்கள். சூழலியல் கவலை நியாயமானது. ஆனால் உங்கள் அரசு கடற்கரைப் பகுதிகளில் எத்தனை திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது? CRZ மீறல்கள் குறித்து அப்போது உங்கள் குரல் எங்கே போனது?
மீனவர்கள் பூர்வீகப் பகுதி, படகு நிறுத்தம், மீன் உலர்த்துதல் தடை வராது என உறுதி வேண்டும் என்கிறீர்கள். நல்ல கேள்வி. உங்கள் ஆட்சியில் மீனவர்களுக்கு நிரந்தர மீன் உலர்த்தும் தளங்கள், பாதுகாப்பான படகுத் துறைகள் எத்தனை உருவாக்கினீர்கள்? 2004 சுனாமிக்குப் பிறகு நீண்ட காலம் ஆட்சி செய்த நீங்கள் அந்தப் பகுதியை எப்படிப் பாதுகாத்தீர்கள்?
CRZ Zone 2-ல் பெரிய கட்டிடம் ஆபத்து என்கிறீர்கள். அதே பகுதியில் உங்கள் காலத்தில் என்னென்ன அனுமதிகள் போயின? இப்போது மட்டும் நினைவு வந்ததா?
கஜானா காலி என்று சொல்லிவிட்டு இவ்வளவு செலவு தேவையா, விஜய் வீடு அருகில் என்கிறீர்கள். கஜானா நிலை உங்கள் ஆட்சியிலும் பேசப்பட்டது. தலைமைச் செயலகத்துக்காகவே கட்டப்பட்ட கட்டிடத்தின் நிலை என்ன என்று கேட்கிறீர்கள். ஓமந்தூரார் வளாகத்தை செயலகமாகக் கட்டி, பின்னர் அதை மருத்துவமனையாக மாற்றிய வரலாற்றை மக்கள் அறிவார்கள். அந்தக் கட்டிடத்தை முழுமையாகப் பயன்படுத்த உங்கள் அரசு என்ன செய்தது? சில தளங்கள் பயன்பாடின்றி இருந்தது, சுகாதாரம் குறைந்தது என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்போது ஏன் சரிசெய்யவில்லை?
பயன்பாடில்லாத பகுதியை செயலகமாக மாற்றி மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்கிறீர்கள். நல்ல யோசனை போல் தெரிகிறது. ஆனால் உங்கள் ஆட்சியில் அதைச் செயல்படுத்த ஏன் தவறினீர்கள்? இத்தனை ஆண்டுகள் உங்கள் அரசு என்ன செய்தது? முட்டைகள் இட்டுக் கொண்டிருந்தீர்களா? பழைய கட்டிடங்களைப் பராமரிக்காமல், புதிய இடம் தேடாமல், மக்கள் பிரச்சினையைத் தள்ளிப்போட்டு ஆட்சி செய்தீர்கள்.
தலைமைச் செயலகத்துக்கு நவீன, பாதுகாப்பான, நீண்டகாலத் தீர்வு தேவை என்பது உண்மை. அதை எதிர்க்கும்போது உங்கள் கட்சியின் ஆட்சிக் காலத்தில் என்ன செய்யப்பட்டது, என்ன செய்யப்படவில்லை என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள். மக்கள் இரண்டையும் பார்க்கிறார்கள்.” இவ்வாறு கூறியுள்ளார்.
