சீனாவில் ஒரு குடும்பம் தங்களின் மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக 3,500 கி.மீ தூரம் காரில் பயணித்து, அந்த நிகழ்வை மறக்க முடியாத ஒரு பயண அனுபவமாக மாற்றியுள்ளது. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஜாவோசுவாங் நகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த 18 வயதான மாணவன், கராமாய் நகரில் உள்ள ஜின்ஜியாங் இரண்டாவது மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கத் தேர்வாகியிருந்தார்.
கல்லூரிக்கு மகனை தனியாக அனுப்பி வைப்பதற்கு பதிலாக, தானே அவனைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்ல, அந்த மாணவரின் தந்தை ‘ஜெங்’ முடிவு செய்தார். இதையடுத்து, ஜெங், அவரது மனைவி, மகன், மகள், மருமகன் மற்றும் அவரது வயதான தந்தை ஆகியோர் இந்தப் பயணத்திற்குத் தயாராகினர். தொடர்ந்து, அவர்கள் கடந்த ஆகஸ்ட் 20 அன்று ஜாவோசுவாங்கிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஏழு பேர் அமரக்கூடிய வாகனத்தில் (கார்) அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் நான்கு நாட்கள் பயணித்து அந்த மருத்துவக் கல்லூரியை அடைந்தனர். மகனைக் கல்லூரியில் சேர்க்க குடும்பமே கல்லூரிக்குச் சென்ற இந்த சம்பவம் குறித்த தகவல் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும், இவர்கள் இந்த பயணத்தைத் தொடங்குவதற்கு முன், ஜாவோசுவாங்கிலிருந்து கராமாய்க்குத் தங்கள் மகனைப் கல்லூரியில் சேர்க்க அழைத்துச் செல்வதாகக் குறிப்பிடும் வாசகத்தையும், தங்கள் காரின் பின்பக்கக் கண்ணாடியில் சீன மொழியில் எழுதியிருந்தனர். இது வாகன ஓட்டிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
இதுகுறித்து ஜெங் கூறுகை​யில், “வி​மானம், ரயி​லில் செல்​வதை விட இதற்குச் செலவு அதி​கம் தான். ஆனாலும், காரில் பயணம் செய்​வது பல நன்​மை​களை அளிக்​கிறது. நாம் நிறையப் பொருட்​களை எடுத்​துச் செல்​ல முடியும். விரும்​பும் இடங்களில் நிறுத்​திக் கொள்​ளலாம். மிக முக்​கிய​மாக, இந்​தப் பயணம் மறக்க முடியாத நினை​வு​களை உரு​வாக்​கு​கிறது” என்​றார். இந்த பயணத்தின் போது, ஜெங், அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோர் மாறி மாறி காரை ஓட்டியுள்ளனர். மேலும், தாங்கள் விருப்பப்படும் இடங்களில் நிறுத்தி இளைப்பாறி சுற்றுலா பயணத்தைப் போல, அவர்கள் இந்த பயணத்தை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளனர்.
