கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு நிகழ்விற்காக தமிழக முதல்வர் விஜய் சேலம் சென்றிருந்தார். அப்போது சுமார் இரண்டு மணி நேரம் ரோடு ஷோவில் ஈடுபட்டு பொதுமக்களை சந்தித்த அவர், பின்னர் மேட்டூர் அணையை திறந்து வைத்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்பார்வை பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில், மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேட்டூர் அணை திறப்பு நிகழ்வு காலம் தாழ்ந்த, தாமதமான நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“கடைமடை வரை தண்ணீர் செல்ல 10 நாட்கள் ஆகும்”
இதுகுறித்து பேசிய பிரேமலதா, குறுவை சாகுபடி ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளை சென்றடைய குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், தண்ணீர் செல்லும் பாதைகள் முழுவதும் ஆகாயத்தாமரைசெடிகள், முட்புதர்கள் உள்ளிட்டவற்றால் நிறைந்திருப்பதாகவும், எனவே அணையை திறப்பதற்கு முன்பே நீர்வழிப்பாதைகளை முறையாக தூர்வார வேண்டும் என பலமுறை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்றும், அரசு இந்த விவகாரத்தில் முழு கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.
“விவசாயிகள் நலன்தான் முக்கியம்”
மேலும், முதல்வர் தனி விமானத்தில் பயணிக்கிறாரா அல்லது மேட்டூர் அணை திறப்பு நிகழ்வுக்காக அரசு ரூ.10 கோடி செலவிட்டதா என்பதெல்லாம் முக்கியமல்ல என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
லட்சக்கணக்கான விவசாயிகள் அரசை நம்பி வாழ்ந்து வருவதால், அவர்களின் நலனில் அரசு முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.
பாட்டிக்கு கூலிங் கிளாஸ்.. பிரேமலதா விமர்சனம்
மேட்டூர் அணை திறப்பு நிகழ்வின்போது அருகில் இருந்த விவசாய குடும்பங்களை விஜய் சந்தித்து, அவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி நலம் விசாரித்தார். அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவருடன் விஜய்சகஜமாக உரையாடியதுடன், தனது கூலிங் கிளாஸை கழற்றி அந்த பாட்டிக்கு அணிவித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கவனம் பெற்றது.
பிரேமலதா விஜயகாந்த் அடித்த கமெண்ட்..கர்ஜித்த ஆதவ்
இந்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய பிரேமலதா,லட்சக்கணக்கான விவசாயிகள் அரசை நம்பி வாழும் நிலையில், அவர்களுக்கு நன்மை செய்வதில் தான் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அணையை பிரபலப்படுத்திக் கொள்வதிலும், போட்டோ சூட் செய்வதிலும் கவனம் செலுத்தக்கூடாது என்றும் அவர் விமர்சித்தார். “பாட்டிக்கு கண்ணாடி போடுவதெல்லாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதையெல்லாம் மக்கள் எப்போதோ பார்த்து முடித்துவிட்டார்கள்” என்றும் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
