இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு துறையின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் துறை சார்ந்த மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு, டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000, டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம், டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் விக்னேஷ், இனிமேல் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 1 ரூபாய் வாங்கினால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, கூடுதல் பணம் வாங்கினால் முதல் மூன்று மாதங்களில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அடுத்த முறையும் அதே தவறு நடந்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள பல டாஸ்மாக் கடை ஊழியர்கள், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பான புகார்களை மதுபிரியர்கள் வீடியோக்கள் மூலம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், மதுபானத்துக்கு கூடுதலாக பணம் வசூலித்த தமிழ்நாடு முழுவதும் 67 ஊழியர்கள் நேற்று ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுக் கடைகளில் விற்பனை விலையைவிட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப் எண் மூலம் பல புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 மதுக்கடை ஊழியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
