சென்னை: பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று கரூரில் வந்து பாட்டு பாடினார்களே.. இப்போது குவாட்டருக்கு 30 ரூபாய் ஆகிவிட்டது.. இப்போது என்ன பாட்டு பாட போகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். மேலும், தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்தால் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி போய்விடும் என்றும் கூறியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், கடந்த ஆட்சியில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இப்போது புதிய ஆட்சியில் குவாட்டருக்கு 10 ரூபாயும், பீருக்கு 20 ரூபாயும் என அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீங்க என கேட்டனர். இதற்கு பதில் அளித்து செந்தில் பாலாஜி கூறியதாவது:-
இதில் ஒரு திருத்தம்.. குவாட்டருக்கு 10 ரூபாய் அல்ல 20 ரூபாய் ஆகிடுச்சு.. ஒரு சில இடங்களில் 30 கூட வாங்குறாங்க.. இத நான் சொல்லவில்லை. அந்த துறையின் அமைச்சரே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார். இன்னைக்கு நேற்று நடக்கல.. பல வருஷமாக நடந்துகொண்டு இருக்கு என அவரே சொல்லியிருக்கிறார். சட்டசபையில் இது பற்றி கேட்டதற்கு கூட சரியாக பதில் சொல்லவில்லை. ஆனால் 10 ரூபாய் வாங்குகிறாங்க என்பதை ஒத்துகொண்டுள்ளனர் தானே..
கரூரில் வந்து பாட்டு பாடினார்களே.. இப்போது இந்த பாட்டுக்கு என்ன பதில் சொல்வார்கள். கரூரில் பாடுன பாட்டுக்கு இப்போ திருப்பி என்ன பாட்டு பாடுவார்கள். ஒரு கருத்தை சொல்வதற்கு முன்பாக ஒரு அரசியல் தலைவரோ, அரசியல் கட்சியோ அதன் உண்மைத் தன்மையை அறிந்து பேசியிருந்தால் ஒரு நேர்மையான அரசியல் தலைவராக எடுத்துக்கொள்ள முடியும். அதை விடுத்து யாரோ எழுதி கொடுக்கிற ஸ்கிரிப்டை சினிமா டயலாக் மாறி வாசித்துவிட்டு மீதி இருக்கிற வேலையை மத்தவங்க பாத்துக்குவாங்க என போகும் சூழல் நடந்து இருக்கு.
ஒரு கருத்தை மட்டும் இந்த இடத்தில் வைக்கிறேன்.. கடமையாக நினைக்கிறேன். நிச்சயமாக இந்த தவெக 5 ஆண்டுகள் தொடர்ந்தால் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும். இந்தியாவில் எல்லா துறைகளிலும் தமிழ்நாடும் முதன்மை மாநிலமாக உள்ளது. எந்த துறையை எடுத்தாலும் முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் தான். இடைத்தேர்தலில் நிச்சயமாக திமுக வெற்றி பெறும்.
தவெக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக சொல்கிறார்கள் என்றால் வெளிப்படையாக என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதை வெளியிட சொல்லுங்கள். 6 சிலிண்டர்கள் கொடுத்தாச்சா என கேளுங்க.. விவசாயக் கடன் சொன்னாங்க.. ஆட்சி அமைத்த அடுத்த நொடியே தள்ளுபடி செய்வோம் என சொன்னாங்க.. என்ன ஆச்சு.. என்ன வாக்குறுதிகளை செய்தீர்கள் என சொல்ல சொல்லுங்க..
முதியோர் உதவித் தொகை எப்போதும் 5 ஆம் தேதிக்குள் வரவு வைத்துவிடுவாங்க. ஆனால் இன்னும் பல இடங்களில் இந்த தொகை போகவில்லை. யாரும் இதை கண்டுக்கவில்லை. இந்த அரசாங்கத்துக்கு இவை எல்லாம் காதிலேயே விழவில்லை. மக்களை பற்றி சிந்திப்பதற்கோ, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இந்த அரசுக்கு நேரமே இல்லை.. தயாராகவும் இல்லை.. ஒன்லி ரீல்ஸ் ஆட்சி தான். ரியல் ஆட்சி இல்லை.. என்று கூறினார்.
