பிரிக்ஸ் மாநாட்டில் டெல்லி பிரகடனம்.. கூட்டாக ஏற்றுக்கொண்ட நாடுகள்! முக்கிய தீர்மானங்கள் என்னென்ன?

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டு பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமான வரி விதிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பணப்பரிவர்த்தனையை எளிதாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ‘புதுடெல்லி பிரகடனத்தை’ ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பரந்த அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனமும் இந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தகத்தை சிதைக்கும் ஒருதலைபட்சமான வரி விதிப்புக்கு எதிர்ப்பு மற்றும், பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும் எனவும் பிரகடனத்தில் முக்கிய அம்சமாக இடம் பெற்று இருந்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் பிரகடனத்துக்கு பிரிக்ஸ் நாடுகள் ஒப்புதல் அளித்தன. ஐக்கிய நாடுகள் சபையில், குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலில், பிரேசில் மற்றும் இந்தியா அதிக பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்துக்கு ஐநா கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள சீனா மற்றும் ரஷ்யா தங்களது ஆதரவை மீண்டும் உறுதி செய்தன.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், அமெரிக்க டாலருக்கு பதிலாக உள்ளூர் நாணயங்களில் அதிக அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்தம் செய்து, ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியங்களைச் சேர்ந்த வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதே பிரகடனத்த்தில் அதிக முக்கியத்துவம் பெற்று இருந்தது.