சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை கிராமத்தைச் சேர்ந்த நுண்சிற்பக் கலைஞர் டி.கே.பரணி குழலூதும் ஸ்ரீ கணபதி சந்தன மர நுண் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த 20 நாட்களில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இந்த குழலூதும் ஸ்ரீகணபதி சிலை உருவாகியுள்ளது. கற்பக விருட்சத்தில் ஸ்ரீ கணபதி அமர்ந்து குழலூதுவது போல சிலை தத்ரூபமாக அமைந்துள்ளது.
ஸ்ரீ கணபதி சிலையின் உயரம் 2 செமீ மட்டுமே. இந்த சிலையில், விநாயகரின் வாகனமான எலிகள் 4 இடம்பெற்றுள்ளன. எலிகள் தம்புரா, வயலின், ஜால்ரா, மத்தளம் வாசிப்பது போல இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீகணபதி, எலிகள், கற்பக விருட்சம் ஆகியவை இணைந்த இந்த சிலையின் மொத்த உயரம் மூன்றே முக்கால் அங்குலம். அகலம் ஒன்றே முக்கால் அங்குலம் மட்டுமே. இதில் எலி சிலைகளின் உயரம் வெறும் அரை சென்டிமீட்டர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு வாய்ந்த, நுண் சிற்பம் வெறும் 20 நாட்களில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. சந்தன மர நுண் சிற்பக் கலைஞர் டி.கே. பரணி, நுண் சிற்ப சிலைகளை வடிவமைத்ததற்காக குடியரசுத் தலைவரின் தேசியவிருதைப் பெற்றவர்.
இவரது தாத்தா, தந்தை, சகோதரர் ஆகியோரும் தேசிய விருது பெற்ற நுண் சிற்பக் கலைஞர்கள் ஆவர். சந்தன மரங்கள் மட்டுமல்லாமல், ஒரே ஒரு அரிசியிலும் சிலைகளை வடிவமைப்பதில் வல்லவர் டி.கே. பரணி என்பது குறிப்பிடத்தக்கது.
20 நாட்களில் இந்த நுண் சிற்பத்தை வடிவமைத்தது தொடர்பாக டி.கே. பரணி கூறியதாவது: எனது சிறு வயதிலிருந்தே நுண் சிற்பங்களை வடித்து வருகிறேன். குறிப்பாக அரிசி, சந்தன மரங்களில் சிலைகளை வடித்து வருகிறேன்.
எனது தந்தை காளாஸ்திரியிடம் இந்த நுண் சிற்பங்களை வடிக்கும் கலையைக் கற்றுக் கொண்டேன். இந்த நுண் சிற்பங்களில் கடவுள் சிலைகளை வடிப்பது அனைத்தும் எனது கற்பனையில் இருந்து வடித்தது.
எந்த ஒரு சிலையையும் மாதிரியாகக் கொண்டு சிற்பங்களை வடிப்பது இல்லை. நுண் சிற்பத்தில் உள்ள அனைத்து சந்தன மரத் துண்டுகளைக் கொண்டு வடிவமைப்பது மட்டுமே.
என் போன்ற கலைஞர்களுக்கு தமிழக அரசு விருதுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
அப்போதுதான் இதுபோன்ற சிலைகளை உருவாக்கும் கலைஞர்கள் தயாராவார்கள். என்னிடம் உள்ள இந்த கலையை யாருக்கு வேண்டுமானாலும் கற்றுத் தருவதற்குத் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் இவர் வடித்த இந்த சிலையை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கிறார்கள். ஆண்டுதோறும் புதுமையான விநாயகர் சிலைகளை செதுக்கி டி.கே.பரணியின் கைவண்ணத்தாலான டெல்லியில் உள்ள தாஜ் கசானா என்ற கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட ராதே கிருஷ்ணா சிலை அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா இந்தியா வருகையின் போது அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
