– சிறப்பு நிருபர்-
பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு, நம் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு அசர வைத்தது.
டில்லியில் நடக்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டு செய்திகளை சேகரிக்க உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த, 1,300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வந்துள்ளனர்.
இவர்களுக்கு என சர்வதேச ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, அதிவேக வைபை இணைப்பு, ஒரே நேரத்தில் ரஷ்யன், சீனம், அரபி, போர்த்துகீசியம், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி, செய்தி விளக்க அறைகள் மற்றும் பிரார்த்தனை கூடங்கள், உணவு மற்றும் பானங்கள் என முழுமையான நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு நின்று விடாமல், ஊடகவியலாளர்களை கவரும் வகையில், ஒரு சிறப்பு ஊடகத் தொகுப்புப் பை வழங்கப்பட்டுள்ளது. பல மாநில அரசுகளோடு இணைந்து வெளியுறவு அமைச்சகத்தால், வடிவமைக்கப்பட்ட இந்த அதிகாரப்பூர்வ ஊடகத் தொகுப்பு, பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நம் நாட்டின் பழங்குடியினப் பாரம்பரியம், மாநிலங்களின் பன்முகத்தன்மை, விவசாயம் மற்றும் பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து வரவேற்கும் வகையில், புதிய முயற்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பீஹாரின் சத்துமாவு மற்றும் தாமரை விதை, ஒடிசாவின் கோராபுட் காபி, குஜராத்தின் பிளாக்-பிரிண்ட் சால்வை மற்றும் சுற்றச்சூழல் நட்புப் பொருட்கள் இந்த பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
