புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா இன்று (ஜூலை 29) கோலாகலமாக நடைபெற்றது.
குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் இன்று காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவில் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்றுள்ளனர்.

ஆன்மிக சிந்தனைகள்
காலத்தால் அழியாத பாரம்பரியத்தை போற்றும் பக்தி, ஆன்மிக சிந்தனைகள் மற்றும் கூட்டு வழிபாட்டுடன் தெய்வீக ஆசிரியரும், நித்திய வழிகாட்டியுமான பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நிகழ்ச்சியை ஒட்டி, சாய் பிரசாந்தி நிலையத்தில் விழாக்கோலம் பூண்டுள்ளது. குல்வந்த் அரங்கம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழாவானது காலை 8 மணிக்கு வேத பாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 8:20 மணிக்கு பிரசாந்தி பஜன் குழுவினரின் பக்தி இசை பிரசாதம் ‘குரு வந்தனம்’ நடைபெற்றது.


மங்கள ஆரத்தி
காலை 9:20 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் மொபைல் மருத்துவமனையின் புதிய வசதி திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:25 மணிக்கு தெய்வீக சொற்பொழிவு மற்றும் பஜனை, மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான் சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்து வருகின்றனர்.
