மகளிர் மசோதா தோல்வி- இன்று இரவு 8.30-க்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுக்கப்போகும் முக்கிய செய்தி என்ன? – women bill fails narendra modi to address the nation at 8:30 pm tonight what next

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்த நிலையில், இன்று இரவு 8:30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே முக்கிய உரையாற்றுகிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா (அரசியல் சாசன 131-வது திருத்த மசோதா) தோல்வியடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு (18.04.2026) நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

வாக்கெடுப்பில் தோல்வி

நாடாளுமன்றச் சிறப்புச் கூட்டத்தொடரில் நேற்று (ஏப்ரல் 17) இந்த மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாகின.
அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு (352 வாக்குகள்) பெரும்பான்மை தேவை. ஆனால், போதிய ஆதரவு கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு

தொகுதி மறுவரையறையுடன் (Delimitation) இந்த மசோதாவை இணைத்ததற்குத் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முயற்சி என அவர்கள் குற்றம் சாட்டினர்.

பிரதமரின் உரை

மசோதா தோல்வியடைந்ததை ஒரு பொன்னான வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டதாகப் பாஜக கருதுகிறது. இது குறித்து நாட்டு மக்களிடம் விளக்கவும், குறிப்பாகப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக இதை முன்வைக்கவும் பிரதமர் மோடி இன்று இரவு 8.30 மணிக்கு உரையாற்றுகிறார்.