இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. தவெக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “இலங்கை ஈழத்திலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு முறையான குடியுரிமையோ, உரிமைகளோ மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்ந்து நீடிக்கிறது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்றவை தமிழர்களைத் தங்கள் சொந்த நாட்டு மக்களாக ஏற்றுக்கொண்டு குடியுரிமை, ராணுவம், காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறைகளில் முன்னுரிமை அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் திறமை பெற்றிருந்தாலும் உயர்கல்வி பெற முடியாமலும், ‘அகதி’ என்ற சொல்லாலேயே முடக்கப்பட்டு சொந்த நிலத்திலேயே அனாதைகளாக வாழும் சூழல் நிலவுகிறது. தமிழர்களின் உயிர்களுக்கும், உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படாமல், வெறும் வாக்காளர்களாக மட்டுமே பார்க்கப்படும் அரசியல் சூழலே இத்தகைய துன்பத்திற்குக் காரணம்.
கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதோ அல்லது ஆந்திரக் காடுகளில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதோ இங்குள்ள அரசுகள் எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, அத்தகைய சம்பவங்களுக்குக் காரணமானவர்களுடனேயே அரசியல் கூட்டணிகள் அமைத்துக் கொள்ளப்படுகின்றன. இப்போது இருக்கும் சட்டமன்றத்திற்கு என்ன பிரச்னை. எதற்கு புதிய சட்டமன்றம்? பசுமை விமான நிலையம், சிப்காட் தொழிற்பேட்டைகள் என்ற பெயரில் ஏழை மற்றும் உழைக்கும் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன. இப்போது சிப்காட் என்ற பெயரில் புதிய இடத்தில் மீண்டும் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.

சர்வதேச அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெருந்துறை போன்ற சிப்காட் பகுதிகளால் நிலத்தடி நீர் நஞ்சாகி, குடிநீரில் யுரேனியம் போன்ற நச்சுக்கள் கலந்து மக்கள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மக்களின் உண்மையான தேவைகளையும், உரிமைகளையும் விவாதிக்க வேண்டிய சட்டமன்றம், இன்றைக்கு சினிமா தியேட்டர் போலவும் சுயபுராணம் பாடும் இடமாகவும் மாறிவிட்டது.
ஜீவானந்தம், இரட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் காமராஜர், கக்கன், முத்துராமலிங்கத் தேவர் போன்ற சான்றோர்களும், தியாகிகளும் அமர்ந்து மக்களின் நல்வாழ்விற்காகக் குரல் கொடுத்த புனிதமான இடத்தில், இன்று உறுப்பினர்கள் முதலமைச்சரைப் புகழ்வதற்கும், சினிமா வசனங்கள் பேசுவதற்கும், தங்கள் குடும்பத்தினருக்கு நன்றி சொல்வதற்குமே நேரத்தைச் செலவிடுகிறார்கள். தியாகிகள் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துப் பெற்ற சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும், அதன் அருமை தெரியாத கூட்டத்திடம் கொடுத்துவிட்டு, மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து தவிக்கும் அவலநிலையே இன்று நீடிக்கிறது.” என்றார்.
