மிரள வைக்கும் 2-வது அடுக்கு.. அண்ணாந்து பார்க்க போறீங்க! துறைமுகம் – மதுரவாயல் பால பணிகள் தீவிரம்

சென்னை: சென்னை மக்களின் பல வருட எதிர்பார்ப்பான சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரட்டை அடுக்கு பறக்கும் சாலைத் திட்டம், இப்போது நகரின் மையப்பகுதிகளில் மிக வேகமாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக, எழும்பூர் பகுதியில் கூவம் ஆற்றின் நடுவே பிரம்மாண்ட தூண்களுக்கு மேல் இரண்டாவது அடுக்குக்கான கான்கிரீட் கட்டமைப்புகள் தயாராகி வருவது சென்னை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் ₹5,500 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரவாயல் முதல் சென்னை துறைமுகத்தின் 10-வது நுழைவு வாயில் வரை மொத்தம் 20.6 கி.மீ தொலைவுக்கு இந்தப் பாலம் அமைகிறது. இதில் நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு வரையிலான சுமார் 14 கி.மீ பகுதி கூவம் ஆற்றின் கரையோரமாக இரண்டு அடுக்கு பாலமாக உருவாக்கப்படுகிறது.

தற்போது எழும்பூர், சேத்துப்பட்டு மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போன்ற முக்கிய இடங்களில் கூவம் ஆற்றுக்குள் தூண்கள் முழுமை பெற்று, அதன் மேல் தளம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தினசரி எழும்பூர் வழியாகப் பயணிக்கும் மக்கள், வானுயர எழும் இந்த இரண்டாவது அடுக்கை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இந்த இரட்டை அடுக்கு பாலம் சாதாரண பாலங்களைப் போல இல்லாமல், சென்னை நகரின் போக்குவரத்து அமைப்பையே முற்றிலும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது:

கீழ் அடுக்கு (முதல் தளம்): இது முழுக்க முழுக்க சென்னை நகர மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் இதில் பயணிக்கலாம். மிக முக்கியமாக, இந்த கீழ் அடுக்கில் பயணிக்க எந்தவித சுங்கக் கட்டணமும் (Toll) வசூலிக்கப்பட மாட்டாது.

மேல் அடுக்கு (இரண்டாவது தளம்): எழும்பூரில் தற்போது வடிவம் பெற்று வரும் இந்த இரண்டாவது அடுக்கு, துறைமுகத்திற்குச் செல்லும் கனரக கன்டெய்னர் லாரிகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரவாயலில் தொடங்கும் சரக்கு லாரிகள், நகருக்குள் எங்குமே இறங்காமல் நேரடியாக சென்னை துறைமுகத்திற்குள் பறந்துவிடும். இதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.

மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால், அதற்கு முன்னதாகவே ஆற்றுக்குள் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கும் பணியை NHAI வேகமாக முடுக்கிவிட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் மற்றும் ஈவிபி ஃபிலிம் சிட்டி பகுதிகளில் உள்ள பிரம்மாண்ட பணிமனைகளில் ராட்சத கான்கிரீட் கர்டர்கள் முன்கூட்டியே வார்க்கப்பட்டு, இரவு நேரங்களில் லாரிகள் மூலம் எழும்பூருக்குக் கொண்டுவரப்பட்டு ஹைட்ராலிக் கிரேன்கள் மூலம் தூண்களின் மேல் பொருத்தப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, போக்குவரத்து காவல்துறையின் சிறப்பு அனுமதியுடன் பகலில் 5 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் தீவிரமாகப் பணிகள் நடக்கின்றன.

பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பயணத்திற்கு இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் வகையில் 13 இடங்களில் ஏறும், இறங்கும் பாதைகள் அமைக்கப்படுகின்றன. சிவானந்தா சாலை, கல்லூரிச் சாலை, ஸ்பர்டேங்க் சாலை, எழும்பூர், சேத்துப்பட்டு மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் எளிதாகப் பாலத்தின் கீழ் தளத்திற்குள் நுழையவும், வெளியேறவும் முடியும்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஈ.வெ.ரா பெரியார் சாலையில் எப்போதும் காணப்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இந்தப் பாலம் முற்றுப்புள்ளி வைக்கும். தற்போது மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்திற்குச் செல்ல பீக் ஹவர்ஸில் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வந்ததும், வெறும் 20 முதல் 25 நிமிடங்களில் துறைமுகத்தை அடைந்துவிட முடியும்.

சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றுப் பாதுகாப்பு நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருவதால், முழு திட்டத்தையும் நவம்பர் 2027-க்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் கூவம் ஆற்றில் தலைநிமிர்ந்து நிற்கும் தூண்களும், தயாராகி வரும் இரண்டாவது அடுக்கும், சென்னையின் போக்குவரத்து வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கவிருப்பதை உணர்த்துகின்றன.