மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையில் இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் விஜய் கண்டிப்பாக வருவார் என தவெக வேட்பாளர் சத்தியபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆறு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால் இந்த தொகுதிகள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் காலியானதாக உள்ளது. இதனிடையில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தான அறிவிப்பினை சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதனையடுத்து முதல் ஆளாக இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்தான அறிவிப்பினை பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளியிட்டது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். இதனை தொடர்ந்து தவெக சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது. தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேல், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுகிறார்கள். அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதே நேரம் முதல்வர் விஜய்க்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு காரணமாக இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என தவெகவினர் கூறி வருகின்றனர்.
