திருவலம்: சர்ச் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில், மூவர் உயிரிழந்த நிலையில், அந்த கட்டடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக, வேலுார் கலெக்டர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
வேலுார் மாவட்டம், திருவலம் அடுத்த, மந்திகிருஷ்ணாபுரத்தில், நேற்று முன்தினம் நிகழ்ந்த சர்ச் கட்டுமான பணி விபத்தில், மூவர் உயிரிழந்தனர்; 14 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கலெக்டர் லீலா அலெக்ஸ் நேற்று கூறியதாவது:-
விபத்து நடந்த கட்டுமான பகுதி, நேற்றைய இடிப்பு பணிகளால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள் அங்கு செல்வதை தடுக்கும் வகையில், இடம் தற்காலிகமாக பூட்டப்பட்டு, ‘நோட்டீஸ்’ ஒட்டப்பட்டுள்ளது.
விரைவில் அந்த இடத்திற்கு முழுமையாக ‘சீல்’ வைக்கப்படும். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சர்ச் நிர்வாகம், ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தரப்பில், கட்டட அனுமதிக்கான எந்தவோர் ஆவணங்களும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்திடமும் அதற்கான பதிவுகள் இல்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை நேற்று வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
