மொபைல் போனுக்கு கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி

திருப்பூர்: ‘கோவிலுக்கு பக்தியுடன் வரும் பக்தர்களுக்கு தண்டனை வழங்குவது போல, மொபைல் போனுக்கு 5 ரூபாய் கட்டணம் எனும் திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும்’ என, ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.


அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கோவில்களில் மொபைல் போனுக்கு தடை என்பதும், அதனை பாதுகாக்க, 5 ரூபாய் கட்டணம் வசூலிப்பதும், அரசின் மீது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் போன் என்பது போட்டோ எடுப்பதற்கு மட்டுமல்ல; பல வகைகளில் மக்களுக்கு மிக தேவையான ஒன்று. கோவிலில் ஆபாசமாக ‘ரீல்ஸ்’ எடுப்பதை தடுப்பது நியாயமானது. ஆனால், மொபைல் போனுக்கு தடை விதித்து, அதை பாதுகாக்க கட்டணம் வசூலிப்பது பக்தர்களுக்கு அதிர்ச்சி தருகிறது.

அவசர உதவிக்கு அல்லது குடும்பத்தினரிடம் இருந்து அவசர செய்திக்கு என்ன ஏற்பாடு இருக்கிறது. பிரம்மாண்டமான கோவிலில், உள்ளே செல்லும் வழியிலேயே திரும்பினால் நெரிசல் தான் ஏற்படும்.

ராமேஸ்வரம் போன்ற கோவில்களில் கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு, திருமண விழாக்களை போட்டோ, – வீடியோ எடுக்க கொள்ளை கட்டணம் வசூலிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை துணை போகிறது.

சபரிமலை அய்யப்பன், திருப்பதி ஏழுமலையான் கோவில்களில் மொபைல் போன்களை பாதுகாக்க கட்டணம் வசூலிப்பதில்லை. அவசர உதவிக்கான அறிவிப்பு வசதி முதலானவையும் உள்ளன.

ஆனால், தமிழகத்தில் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்துவதிலேயே அறநிலையத்துறை குறியாக இருப்பது வெட்கக்கேடு.

எனவே, கோவிலுக்கு பக்தியுடன் வரும் பக்தர்களுக்கு தண்டனை வழங்குவது போல உள்ள இந்த திட்டத்தை, அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், மொபைல் போன் பாதுகாப்பை இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Source link